"வேகமாக பரவுகிறது, ஆனால் கட்டுக்குள் உள்ளது" - புதிய வகை கொரோனா குறித்து ஹூ
லண்டன்: பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வந்தாலும் நிலைமை இன்னும் கையை மீறிப் போகவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் நாட்டில் தான் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.
வேகமாகப் பரவும் கொரோனா
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 200,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிதாக 33,364 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ரஷ்யாவில் 29,350 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவுகிறது
பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது மற்ற கொரோனா வகைகளைவிட மிக வேகமாகப் பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்டத்தின் இயக்குநர் மைக்கேல் ரியான் கூறுகையில், "மற்ற கொரோனா வகைகளைவிட இந்த வகை மிக வேகமாகப் பரவுகிறது. ஆனால், இதற்காக நிலைமை கட்டுக்குள் இல்லை என்று கூறிவிட முடியாது. அதேநேரம் வைரஸ் பரவலை அதன் போக்கிலும் விட்டுவிட முடியாது" என்றார்.
நிலைமை கைமீறிவிட்டது
அதேநேரம் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் நாட்டின் சுகாதார செயலர் மேட் ஹான்காக், "மற்ற கொரானா வகைகளைவிட இந்த வகை 70 சதவீதம் வரை வேகமாகப் பரவுகிறது. நிலைமை நம் கட்டுப்பாட்டைத் தாண்டி சென்றுவிட்டது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீவிரமான நடவடிக்கை
தொடர்ந்து பேசிய மைக்கேல் ரியான், "நாம் இப்போது தேவையான நடவடிக்கைகளை மிகச் சரியாக எடுத்து வருகிறோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை இன்னும் கொஞ்சம் தீவிரத்தோடு செய்தால் போதும். வைரஸ் பரவல் இன்னும் கொஞ்சம் குறைந்தால்கூட அதனை நாம் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்" என்றார்.
பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவுக்குத் தடை
இதன் காரணமாகப் பிரிட்டன் நாட்டில் இருந்து வருபவர்களுக்கு இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளது. பிரிட்டனைப் போலவே தென் ஆப்பிரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாகத் தென் ஆப்பிரிக்காவுக்கும் பல நாடுகள் தங்கள் எல்லையை மூடியுள்ளன.