இந்து - முஸ்லீம் கலவரம் நடந்த முசாபர்நகரிலா இப்படி! பாஜக எம்எல்ஏவை விரட்டியடித்த பொதுமக்கள்.. வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய சென்ற பாஜக எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் ஓட,ஓட விரட்டிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் ஒரு காலத்தில் இந்து - முஸ்லீம் பிரிவினையின் மையமாக பார்க்கப்பட்ட.. ஒரு காலத்தில் கலவர பூமியாக கருதப்பட்ட முசாபர்நகர் தொகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
இந்து ஜாட் பிரிவினருக்கும் - இஸ்லாமியருக்கும் இடையில் இங்கு 2013ல் நடந்த கலவரம் தேசத்தையே உலுக்கியது. அப்படிப்பட்ட முசாபர்நகர் தொகுதியில் மக்கள் ஒன்றாக சேர்ந்து பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனியை விரட்டி அடித்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது.
இன்னைக்கு ஃபுல் மீல்ஸ் தான்.. கே.பி.அன்பழகன் வீட்டின் முன்பு குவிந்த.. தொண்டர்களுக்கு உணவு விநியோகம்
உத்தர பிரதேச தேர்தல்
எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இந்த கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முழுமையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.
பாஜக எம்.எல்.ஏ
அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முசாபர்நகரில் உள்ள கட்டௌலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனி நேற்று ஒரு கிராமத்தில் பிரசார கூட்டத்திற்கு வந்திருந்தார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விக்ரம் சிங் சைனிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்
ஓட, ஓட துரத்தினார்கள்
''எங்கள் கிராமத்தில் இருந்து செல்லுங்கள்'' என்று கூறி அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வசைபாட ஆரம்பித்தனர்.; இதனால் பீதி அடைந்த எம்.எல்.ஏ. காரில் இருந்து செல்ல முயனறார். ஆனாலும் கடும் கோபத்தில் இருந்த மக்கள் அவரது காரை ஓட, ஓட துரத்திச் சென்றனர். கிராம மக்கள் எம்எல்ஏவுக்கு எதிராக கோஷம் எழுப்புவதும், அவரை துரத்தி அடிக்கும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கிராம மக்கள் எம்எல்ஏ மீது ஆவேசமாக கோபப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வேளாண் சட்டத்தை ரத்து செய்யும்படி விவசாயிகள் போராடியபோது அவர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்தவர் விக்ரம் சிங் சைனி. இதனை மனதில் வைத்தே பொதுமக்கள் அவரை விரட்டி உள்ளனர்.
'வெடிகுண்டு வீசுவேன்' என்று பேசியவர்
மேலும், 2029-ம் ஆண்டு ''இந்தியாவில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தவர்களை வெடிகுண்டு வீசுவேன் என்றும் நமது நாடு ஹிந்துஸ்தான். அதாவது இந்துக்களுக்கான தேசம்'' என்றும் விக்ரம் சிங் சைனி சர்ச்சையாக கூறினார். ''பசுக்களை கொல்பவர்களின் கைகால்களை உடைப்போம்'' என்றும் அவர் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
கலவரம்
ஜாட் பிரிவினருக்கும் - இஸ்லாமியருக்கும் இடையில் முசாபர்நகரில் 2013ல் நடந்த கலவரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. அந்த கலவரம் நடந்த அதே முசாபர்நகர் தொகுதியில்தான் இப்போது பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி விரட்டி அடிக்கப்பட்டு இருக்கிறார். ஜாட் பிரிவினர் - இஸ்லாமியர் பிரிவினையை மறந்து இந்த சம்பவத்தில் ஒன்றாக கைகோர்த்து உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 2013ல் இங்கு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை முசாபர்நகரில் நடந்த கலவரத்தில் 42 முஸ்லீம்கள், 20 இந்துக்கள் என்று 62 பேர் கொல்லப்பட்டனர். 90க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். பலர் ஊரை மொத்தமாக காலி செய்தார்கள்.
உத்தர பிரதேசம்
40 ஆயிரம் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி வெவ்வேறு ஊர்களில் நிரந்தரமாக தஞ்சம் அடைந்தார்கள். இந்தக் கலவரம் முஸ்லீம் மக்களுக்கும் ஜாட் இன மக்களுக்கும் இடையில் நடந்தது. உத்தர பிரதேச வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கலவரமாக இது கருதப்பட்டது. உச்ச நீதிமன்றமே இந்த கலவரத்தை கண்டிக்கும் வகையில் அப்போது நிலைமை மோசமானது. கடைசியில் ராணுவம் வந்து கலவரத்தை கட்டுப்படுத்தும் நிலை வரை சென்றது. அங்கு நடந்த இந்து - முஸ்லீம் இடையிலான சசாலை டிராபிக் பிரச்சனை ஒன்றுதான் இந்த கலவரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இன்னும் சிலர் இந்து - முஸ்லீம் இடையிலான ஈவ் டீசிங் பிரச்சனைதான் இந்த கலவரத்திற்கு காரணம் என்றும் கூறி வருகிறார்கள். இந்து பெண்ணை இஸ்லாமியர்கள் சிலர் ஈவ் டீசிங் செய்ததாக புகார் வைக்கப்பட்டது. அதற்கு பழி வாங்கும் விதமாக இரண்டு இஸ்லாமியர்கள் இந்துக்குள் மூலம் கொலை செய்யப்பட்டதாகவும், அது கலவரமாக வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களில் கலவரம் ஏற்பட உண்மையான காரணம் எது என்பது இப்போதும் புதிராகவே உள்ளது.
2018 சமாதானம்
2013ல் கலவரம் ஏற்பட 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக அதிக அளவு இந்து வாக்குகளை பெற்றுவென்றது . அதன்பின் 2018 வரை இந்து - முஸ்லீம் இடையே முசாபர்நகரில் பிளவு காணப்பட்டது. 2018 தொடக்கத்தில்தான் இவர்களுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடக்க தொடங்கியது. ஜாட் இன மக்கள் தங்கள் தவற்றை உணர்ந்து இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்க சென்றார்கள். முஸ்லீம்களைக் கொன்ற ஜாட் இளைஞர்கள் ஒவ்வொரு முஸ்லீம் வீடாகச் சென்று மன்னிப்பு கேட்டார்கள். மூன்று முறை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஜாட் இளைஞர்கள் மன்னிப்பு கேட்டனர்.
கோர்ட் வழக்கு
ஆனாலும் இரண்டு தரப்பும் மாறி மாறி தொடுத்த வழக்கு ஒரு பக்கம் கோர்டில் நடந்து வந்தது. எனவே பிரச்னையை முடிக்கும் விதமாக ஜாட் இன மக்கள் முஸ்லீம்கள் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார்கள். பின்னர் இஸ்லாமியர்களும் வழக்கை வாபஸ் வாங்கினார்கள். பின் பஞ்சாயத்து நடத்தி இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம் என்று 2018ல் முடிவெடுத்துள்ளனர். போலீஸ் பாதுகாப்பில் இந்தப் பஞ்சாயத்து நடந்தது. பல நாட்களாக பஞ்சாயத்து நீடித்தது. இந்த பஞ்சாயத்தில்தான் இரண்டு தரப்பினரும் பகையை மறந்து ஒன்று சேர்ந்தனர்.
கோரிக்கை
இதில் முஸ்லீம் மக்கள் ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்துள்ளனர். இந்தப் பஞ்சாயத்தில் என்ன பேசினாலும் அதை நாங்கள் ஏற்போம்.. நாங்களும் மன்னிப்பு கேட்போம் .. ஆனால் ஒரு பாஜக கட்சி உறுப்பினரும் அந்த கூட்டத்தில் இருக்கக் கூடாது என்றுள்ளனர். ''நாங்க ஜாட் இன மக்களை மதிக்கிறோம்.. எதோ தவறுதலாக மோதல் நடந்துவிட்டது.. அவர்களும் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள்.. நாங்களும் மன்னிப்பு கேட்கிறோம்.. ஆனால் பாஜகவினர் கூட்டத்திற்கு வந்தால் நாங்கள் வர மாட்டோம்'' என்றுள்ளனர். இதையடுத்து பாஜகவினர் யாரும் இன்றி இந்து - இஸ்லாமியர் மட்டும் கூட்டம் நடத்தி சமாதானம் செய்து வைக்கப்பட்டது. உபியில் நடந்த பெரிய பஞ்சாயத்து இது என்று கூறப்படுகிறது.
சுவாரசிய சம்பவம்
அங்கு பஞ்சாயத்து நடந்து முடிந்த போது ஒரு சுவாரசிய சம்பவமும் நடந்தது. பஞ்சாயத்து முடிந்தது முஸ்லீம்கள் அனைவரும் சுயமாக முன் வந்து ஜெய் ஸ்ரீ ராம், ஹர ஹர மஹாதேவ் என்றும் கோஷமிட்டனர். இது அங்கு இருந்த இந்துக்களை வியக்க வைத்தது. உடனே ஜாட் இன மக்கள் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டனர். 2018ல் இந்த பஞ்சாயத்து முடிந்ததில் இருந்தே இந்து - முஸ்லீம் மக்கள் அங்கு நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் மக்கள் ஒன்றாக சேர்ந்து வந்து அங்கு பாஜக எம்எல்ஏவை இந்த முறை விரட்டி உள்ளனர்... இந்து - மத ஒற்றுமையை தாண்டி விவசாய பிரச்சனை, விளையாசி பிரச்சனை, ஆதித்யநாத் ஆட்சி மீதான அதிருப்தி ஆகிய பல விஷயங்கள் அங்கு இந்து முஸ்லீம் இடையில் நெருக்கத்தை அதிகரித்து இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.