சதுரகிரி மலையில் அன்னதானம் வழங்க கூடாது.. ஆனால் இங்க கொடுக்கலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்த அன்னதான மடங்கள் அறநிலையத்துறையின் உத்தரவால் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள தனியார் உணவகங்களில் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்திருளப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
தனியார் உணவகங்கள் திறப்பு
அந்த மனுவில், மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலையில் 8 கிமீ தொலைவில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த அன்னதான மடங்கள் மூலம், பக்தர்களுக்கு 24 மணிநேரமும் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்னதான மடங்களை மூட உத்தரவிட்டார். பிறகு, தனியார் உணவகங்கள் அங்கு திறக்கப்பட்டன.
குடிநீர் வசதி செய்ய வேண்டும்
அப்படி திறக்கப்பட்ட தனியார் உணவகங்களில் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அன்னதான மடங்களை திறக்கவும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து உத்தரவிவேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ஆடி அமாவாசைக்கு சதுரகிரி வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், வனத்துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
மலை அடிவாரத்தில் வழங்கலாம்
இதையடுத்து வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கூடாது என்று உத்தரவிட்டது. அதேநேரம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவோர் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே அன்னதானம் வழங்கிக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.
ஆடி அமாவாசை திருவிழா
மேலும் கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெறமால் வைக்கப்பட்டுள்ள கடைகளை வனத்துறையினர் அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, இவ்வாண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தது உத்தரவிட்டனர்.