தேனியில் வெளுத்து வாங்கிய கனமழை.. தேங்கிய மழை நீர்.. சிரமத்தில் வாகன ஓட்டிகள்!
மதுரை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று மாலை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்திருந்தது.
சிஎன்ஜி, பிஎன்ஜி எரிவாயு விலை குறைப்பு.. ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. குஜராத்தில் திடீர் சலுகை
தேனியில் கனமழை
அதன்படி தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மாலையில் பரவலாக ஒருசில இடங்களில் கனமழையும்.. லேசான மழையும் பெய்தது. கன்னியாகுமரியை பொறுத்தவரை பரவலாக லேசான மழை பெய்தது. தேனியில் நேற்று மாலை 4 மணியளவில் மிக கனமழை பெய்தது. மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக கம்பம், பெரியகுளம், போடி, சின்னமனூர் உள்பட பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
குளம்போல் தேங்கிய மழை நீர்
இதனால் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை சாலை, பெரியகுளம் சாலை மற்றும் கம்பம் சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. மதுரை சாலையில் நீண்ட தூரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள். இதேபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்தது. வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. பல இடங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.
கழிவு நீரோடு...
திடீரென பெய்த கனமழையின் காரணமாக கழிவுநீர் வெள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதேபோல் வியாபார கடைக்குள்ளேயும் கழிவுநீர் கலந்து மழை நீர் சென்றதால் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் நகரின் சில இடங்களில் உள்ள குண்டு குளியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
மழைநீர் தேங்கியது
மாலை 4 மணிக்கே மழை பெய்ய தொடங்கியதால் பள்ளி மாணவர்களும் நனைந்தபடியே வீட்டிற்கு செல்ல நேரிட்டது. இதேபொல் தேனி பழைய பேருந்து நிலையம், பழைய டிவிஎஸ் சாலை போன்ற பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள். மதுரை மாவட்டத்திலும் இரவு 7 மணியளவில் கனமழை பெய்தது. மதுரை பஸ் நிலையம் அருகே பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றதை பார்க்க முடிந்தது.
விருதுநகரில் மழை
விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர், சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மட்டுமே லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலையில் இருந்து இரவு 9 மணி வரை பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமமடைந்தனர்.
பட்டாசு உற்பத்தி பாதிப்பு
தீபாவளி நேரத்தில் அங்கு பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வரும். மாலை முதல் இரவு வரை பெய்த மழையால் அங்கு பட்டாசு விற்பனையும் தயாரிப்பு பணியும் பாதிக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இன்றும் பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.