ஜெ. மரணத்திலும் சந்தேகம் வந்ததே.. சு.சாமி மீது வழக்கு போட்டீர்களா? மாரிதாஸ் வழக்கில் கோர்ட் கேள்வி!
மதுரை: பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று மாரிதாஸ் வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ்Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பாஜகவிற்கு ஆதரவாகவும், திமுக கட்சிக்கு எதிராகவும் இவர் வீடியோ வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் இரண்டு புகார்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காக மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு ஒன்றுதான் இதற்கு காரணம். பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்டர் போட்ட முதல்வர்.. உன்னிப்பாக கவனிக்கும் டிஜிபி.. மாரிதாஸ் முதல் கிஷோர் சாமி வரை.. பரபர கைதுகள்
வழக்கு
அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு எதிராக இவர் சில மாதங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அந்த சேனல் நிர்வாகியின் மெயில் என்று கூறி பொய்யான மெயில் ஒன்றை இவர் வெளியிட்டு இருந்தார். இந்த பொய்யான மெயில் குறித்து சேனல் நிர்வாகம் புகார் அளித்த நிலையில் மோசடி வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். உத்தமபாளையம் சிறையில் இருந்தவர் மீண்டும் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.
மாரிதாஸ் கைது வழக்கு
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி வழக்கில் டிசம்பர் 27ம் தேதி வரை மாரிதாஸுக்கு நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் மாரிதாஸுக்கு 27ம் தேதி வரை காவல் அளித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாரிதாஸ் சுப்பிரமணியன் சாமி
இந்த நிலையில்தான் இன்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மாரிதாஸ் சார்பாக இன்னொரு வழக்கும் பதியப்பட்டு இருந்தது. அதில் தன் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்க கூடாது. தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்து இருந்தார். உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்தார்.
நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசுக்கு முக்கிய கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணிய சாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? அவரும் இதில் கருத்து தெரிவித்தாரே. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின்போது நிறைய சந்தேங்கள் எழுந்ததே. அப்போது சிலர் இது கொலையாக இருக்கலாம் என்று கேள்வி எழுப்பினார்களே, அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மாரிதாஸ் வழக்கு விசாரணை
இதையடுத்து தமிழ்நாடு அரசு வாதத்தில், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாரிதாஸ் ட்வீட்டை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? மாரிதாஸ் தமிழ்நாட்டின் நேர்மைத் தன்மை குறித்தே கேள்வி எழுப்பியிருக்கிறார். மனுதாரர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவர் தமிழ்நாடு அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த ட்வீட்டை செய்துள்ளார். பேச்சு சுதந்திரம் எனும் பெயரில் அவர் இத்தகைய கருத்துக்களை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
ஏற்க முடியாது
அரசின் திட்டங்களை விமர்சிப்பது போன்றவை தவறல்ல. ஆனால், முப்படைகளின் தலைமை தளபதியின் மரணம் நிகழ்ந்திருக்கும் சூழலில், பொது தளத்தில் மக்களுக்கு வழங்கியிருக்கும் இது போன்ற தகவல் ஏற்கத்தக்கதல்ல. அவரது கைதின் காரணமாகவே வன்முறை தடுக்கப்பட்டது. பிபின் ராவத் மரணம் குறித்து ட்விட் செய்தவர்கள், தொடர்பாக சைபர் குற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர், என்று தமிழ்நாடு அரசு இதில் வாதம் வைத்தது.
மாரிதாஸ் தரப்பு
இதற்கு, கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில்தான் கருத்து தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டதால், கருத்து சுதந்திர சிறகுகள் காயப்பட்டுள்ளன என்று மாரிதாஸ் தரப்பு வாதம் வைத்தது.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, 124(A)- அரசுக்கு எதிராக, அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது. சட்ட, ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசுவது . 153 (A)- சாதி, மதம், குழுக்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக நடப்பது ஆகிய பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டில் அது போல எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசு பதில்
அதற்கு அரசுத்தரப்பில், அவரது முந்தைய ட்வீட்களில் இது போல மத வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி," இந்த ட்வீட்டில் அது போல எதையும் பார்க்கவில்லை. இந்த வழக்கு அந்த ட்வீட்டிற்கானது மட்டுமே" என தெரிவித்தார். அரசுத்தரப்பில்," விசாரணை என வரும் போது ஒட்டு மொத்தமாக பரந்து பட்ட அளவிலேயே இருக்கும்" என தெரிவிக்கப்பட்டது.
Recommended Video
மரணம் சந்தேகம்
முப்படைகளின் தலைமை தளபதியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணையை நடத்தி வரும் சூழலில், அது குறித்து வதந்தியை பரப்பியுள்ளார்.ஆட்சியிலியிருக்கும் அரசுக்கு எதிராக மக்களை திருப்பும் நோக்கில் இது போல ட்வீட் செய்துள்ளார். அதனடிப்படையிலேயே வழக்கு பதியப்பட்டு மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது. இதையடுத்து இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நாளை நடக்கும் என்று கூறி மனுவை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார்.