குருத்தோலை ஞாயிறு: ஓசன்னா பாடியபடி தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மதுரை: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக குருத்தோலை ஞாயிறு கருதப்படுகிறது. பாடுகளின் ஞாயிறு என்று அழைக்கப்படும் இந்த ஞாயிற்றை அடுத்து வரும் வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். ஏசுகிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையின்போதுதான் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடலை பாடிக்கொண்டு கொரோனா விதிகளைக் கடைபிடித்து ஊர்வலமாக சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் தேவாலய பங்கு தந்தை நெல்சன்ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ராஜபாளையம் தேவாலயத்தில் இருந்து குருத்தோலையுடன் ஊர்வலமாக, தாளமுத்து நகர் மடுஜெபமாலை ஆயலம் வந்தடைந்தனர். பின்னர், அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில் தாளமுத்து நகர் சுற்றவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தாளமுத்துநகர் பங்கிற்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில், உதவி பங்கு தந்தை ஸ்டீபன் மரியதாஸ் தலைமையில் ஏராளமானோர் குருத்தோலை ஏந்தி, ஓசானா பாடல்களை பாடிவாறு ஊர்வலமாக சென்று புனித ஆரோக்கியநாதர் திருப்பலியை நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசுகிறிஸ்து சிலுவை சுமந்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தாராம். அப்போது, ஏசு ஒரு கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இயேசுகிறிஸ்து ஜெருசலேம் நகரில் கழுதையின்மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையிலேயே இந்தக் குருத்தோலை பவனி நடைபெறுகிறது.
ஞாயிற்றுகிழமையான நேற்று குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது. இந்த வாரம் முழுவதும் கிறித்துவர்கள் புனிதவாரமாக கடைபிடிக்கின்றனர். தினசரியும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளும் வருவதால், அவற்றின் மூலம் தொற்று பரவக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கிறிஸ்தவ ஆலய மத போதகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளையே புனிதவெள்ளியாக கடைபிடிக்கின்றனர். ஏசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்றாவது நாள் அவர் உயிர்த்தெழுந்து தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி அளிக்கிறார். அந்த நாளைத்தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் என்று சொல்லப்படும் உயிர்ப்புத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 4ஆம்தேதி ஈஸ்டர் பண்டிகை நாளாக கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications