"ஆட்சியில் பங்கு.. இல்லனா விஜய் உடன் கூட்டணி”.. ஆவேசமாக பேசிய காங்கிரஸ் நிர்வாகி.. திமுக ஷாக்!
மதுரை: “ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்பதை மீண்டும் கேட்கிறோம். இல்லையென்றால், விஜய் கூட்டணி இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ பார்த்துவிடுவோம்" என மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலமாக தீவிரமாக எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டும் வகையில் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

ஆட்சியில் பங்கு கோரிக்கை
ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸ் கட்சியின் குரலால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. திமுக தலைவர்கள் பலரும் காங்கிரஸாருக்கு பதில் கொடுத்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களின் இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின், மொத்தம் 7 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இன்றைய கூட்டத்திலும் ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுவில் தீர்மானம்
தமிழக அரசு மற்றும் அதிகாரப் பகிர்வில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது இருப்பதை விட அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்துவது மற்றும் மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது உள்ளிட்ட 7 அம்சங்கள் தீர்மானங்களாகக் கொண்டு வரப்பட்டன.
இந்தச் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி வேல்முருகன், “தமிழகத்திலே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை விஜய் உடன் இணைந்து உருவாக்குவோம். உலகம் முழுக்க காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுகிறார்கள். ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. வாய்விட்டுக் கேட்டும், முதல்வரே இல்லை என்று சொல்லிவிட்டார். திமுக மைனாரிட்டியுடன் வெற்றி பெற்றால் நாம் அதிகம் வெற்றி பெற்றால் நம் இடம் அதிகம்.
விஜய் உடன் கூட்டணி - நிர்வாகி பேச்சு
விஜய்க்கு தனித்து நின்றாலே 30% ஆதரவு வந்துவிடும். காங்கிரஸ் கட்சி இணைந்துவிட்டால் தமிழகத்தில் தட்டித் தூக்கி விடலாம். விஜய் காங்கிரஸை அழைக்கிறார். நாம் போக விரும்பவில்லை. ஆனால் திமுக நம்மை அங்கு தள்ளப் பார்க்கிறது.
ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்பதை மீண்டும் கேட்கிறோம். இல்லையென்றால், விஜய் கூட்டணி இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ பார்த்துவிடுவோம். இழப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றுமில்லை." என காங்கிரஸ் நிர்வாகி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணிக்கம் தாகூர்
இந்த செயற்குழு கூட்டத்தில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், "பாஜகவை எதிர்க்கும் துணிச்சலும், தைரியமும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உள்ளது. அன்போடும் மரியாதையோடும் எங்களை நடத்தினால் நாங்களும் அப்படி இருப்போம். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். சிறுமைப்படுத்தி பேசினால் அதே பாணியில் பதிலடி கொடுப்பவன்தான் காங்கிரஸ் காரன்.
தமிழகத்தில் 2016 முதல் திமுகவுடன் காங்கிரஸின் கூட்டணி தொடர்கிறது. இந்த கூட்டணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 70 நாட்களாக நாம் காத்திருக்கிறோம். நாம் தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதைப் போலவே நாமும் எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சி கப்பலை போல மிகப்பெரிய கட்சி. நான் கேட்பது மரியாதையும், அன்பும் மட்டும்தான்.
மதுரை வடக்கு நிச்சயம் வேண்டும்
திமுகவின் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி, காங்கிரஸ் கட்சி குறித்து பேசும்போது வருத்தமாக இருக்கிறது. கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும் என ஒரு அமைச்சர் கூறுகிறார். இப்படி பேசுவது வலியை தருகிறது. நீங்கள் செய்த தவறுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். ராகுல் காந்திக்கு திமுக தலைமை கொடுக்கும் முக்கியத்துவத்தை, காங்கிரஸில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.
நான் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. நாங்கள் எதற்கும் கமிஷன் கேட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் லட்சியமே மதுரை வடக்கு தொகுதி தான். அந்த தொகுதி நமக்கு நிச்சயமாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கூறி இருக்கிறேன். எங்களிடம் குறைவான ஆட்கள் இருக்கலாம். பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் அரியணை ஏறியிருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்" எனப் பேசினார்.
-
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்!












Click it and Unblock the Notifications