3 எழுத்துக்காரருக்கு மூன்றெழுத்து பரிசு.. டெல்லியில் கிடைக்கும்.. தமிழ்மகன் உசேன் சூசகம்!
மதுரை : ஓபிஎஸ் எனும் மூன்றெழுத்துக்காரருக்கு தோல்வி எனும் மூன்றெழுத்தை பரிசாக உச்ச நீதிமன்றம் விரைவில் வழங்க உள்ளது. அதன் பின்னர் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய உள்ளோம் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு அடுத்தகட்டமாக டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே, இரு தரப்பும் இணைய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ளத் தயார் என ஈபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
அழுத்தம் கொடுக்கும் 'மேலிடம்’! அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? 'சிவப்பு கம்பளம்’ விரிக்கும் ’மாஜிக்கள்’!
தமிழ் மகன் உசேன் பிரார்த்தனை
தமிழ்நாட்டில் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்திட, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், தமிழகம் முழுவதும் தர்ஹாக்களுக்கு பயணம் செய்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள தர்காவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொது செயலாளராக வேண்டும், தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்கவும் வேண்டும் என அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பிரார்த்தனை செய்தார்.
நிரந்தர பொதுச் செயலாளராக
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைச்சாலையில் இருந்தபோது அவர் விடுதலையாகி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என இந்தியா முழுவதும் 275க்கும் மேற்பட்ட தர்ஹாக்களில் பிரார்த்தனை செய்து அது நிறைவேறியது. அதனால் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற 75 தர்ஹாக்களை தேர்வு செய்து, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக அவர் மீண்டும் பதவி ஏற்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரார்த்தனை நடத்தி வருகிறோம்.
மீண்டும் முதலமைச்சராக
தற்போது 45-ஆவது தர்ஹாவாக கருங்காலக்குடி தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டோம். இதனை தொடர்ந்து இன்னும் பல்வேறு தர்ஹாக்களில் பிரார்த்தனை செய்ய உள்ளோம். அதிமுகவில் 2,615 பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவும் வர வேண்டும் என்ற எங்களுடைய பிரார்த்தனையையும் இறைவன் ஏற்றுக் கொள்வார்.
தீர்ப்புக்குப் பிறகு
ஓபிஎஸ் எனும் மூன்றெழுத்துக் காரருக்கு தோல்வி எனும் மூன்றெழுத்தை உச்ச நீதிமன்றம் விரைவில் பரிசாக வழங்க உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் அதிமுக பொதுக்குழு கூடி நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார் தமிழ் மகன் உசேன்.
எப்போது வீட்டுக்கு அனுப்புவது
மேலும், திமுக இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் இயக்கமாக உள்ளது. தன்னந்தனியாக ஒரு பெண் நடந்து சென்றால் துண்டு துண்டாக வெட்டுகின்ற காலமாகவும், பட்டப் பகலில் பலாத்காரம் நடைபெறும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போயிருப்பதை பார்க்கிறீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த திமுக அரசு எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்புவது, மீண்டும் எடப்பாடியை முதலமைச்சராக்குவது என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.