ஜாதகத்தில் கோளாறு: ஆட்டுக்கு தாலி கட்டிய இளைஞர் - இருதார தோஷம் நீங்க பரிகாரம்
ஜாதகத்தில் தோஷம் நீங்க ஆட்டுக்கு தாலி கட்டி மனைவியாக்கியுள்ளார் ஒரு இளைஞர். ஆந்திராவில் இந்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் இரண்டு தார திருமண தோஷம் இருந்தால் வாழை மரத்திற்கு தாலி கட்டுவார்கள். ஒரு இளைஞரோ தனது ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்க ஆட்டுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இன்றைய கால கட்டத்தில் திருமணம் நடைபெறுவது எளிதான காரியமாக இல்லை. பல லட்சம் செலவு செய்ய தயாராக இருந்தாலும் கல்யாணத்திற்கு பெண் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. பல 90 கிட்ஸ்களின் வாழ்க்கை துணை கிடைக்காமல் தனியாகவே போய் கொண்டுள்ளது. தோஷங்கள்தான் திருமண தடைக்குக் காரணமாக உள்ளது.
திருமண தடை நீங்கவும் தோஷம் நீங்கவும் தமிழகத்தில் பல பரிகாரக்கோவில்கள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி, கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி கோயில்களிலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
இருதார தோஷம், களத்திர தோஷம் இருந்தல் தமிழகத்தில் வாழை மரத்திற்குத் தாலி கட்டுவார்கள் வட மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில மரங்களுக்கு தாலி கட்டும் வழக்கத்தை பல பகுதிகளில் காணமுடியும்.

ஆந்திரா இளைஞரின் தோஷம்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள நூஜிவீடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது திருமணத்திற்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக ஜோதிடர் கூறினார். ரமேஷின் ஜாதகத்தில் இரண்டு தாரம் உள்ளதாக ஜோசியர் கூறியதோடு அதற்கு பரிகாரமும் கூறினார்.

ஆட்டுக்கு தாலி கட்டிய இளைஞர்
முதலில் ஆட்டுக்கு தாலி கட்டினால் தோஷம் கழிந்துவிடும் என ஆலோசனை ஜோதிடர் ஆலோசனையைக் கேட்டு
தெலுங்கு புத்தாண்டு தினமான சனிக்கிழமை உகாதி நாளில் அங்குள்ள நவகிரக கோயிலில் ரமேஷுக்கும் பெண் ஆட்டுக்கும் திருமணம் நடந்தேறியது. இந்த திருமணத்தில் பெண் வீட்டார் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பதே குறை. எனினும் மாப்பிள்ளை வீட்டார் புடைசூழ வேத மந்திரங்களை பூசாரி ஓத தோஷத்தை கழிக்க திருமணம் நடந்தது.

குக்கருடன் கல்யாணம் விவாகரத்து
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் ஆட்டுக்குட்டியை திருமணம் செய்தார். இந்தோனேசியாவில் குக்கரை, பதிவு திருமணம் செய்து கொண்ட இளைஞர், சில நாட்களில் அதனை விவாகரத்து செய்தது கடந்தாண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஒரு ஆட்டை இளைஞர் மணமுடித்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவுண்டமணி ஒரு படத்தில் கழுதைக்கு தாலி கட்டி அதனுடன் வாழ்க்கை நடத்துவார். ஆந்திரா இளைஞரோ ஆட்டுக்கு தாலி கட்டி தோஷம் கழித்துள்ளார்.

பரிகாரம் செய்வது ஏன்
ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், ஆயுள்ஸ்தானத்தில் பாப கிரகங்களின் சஞ்சாரம் இருந்தாலோ பாவ கிரகங்களினால் பார்க்கப்பட்டாலோ திருமணம் கைகூடி வருவதில் தடைகள் ஏற்படும். எந்த கிரகங்களினால் திருமணத்தில் தடை ஏற்படுகிறதோ அந்த கிரகங்களை சாந்திப்படுத்த பரிகாரங்களை செய்ய வேண்டும்.

சனி சந்திரன் சேர்க்கை
விரைவாக நகரும் கோளான சந்திரன், மெதுவாக நகரும் சனி கூட்டணி சேர்ந்து ஒரு கிரகத்தில் இருந்தால் அது புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ, சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவது இல்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது.

களத்திர தோஷத்திற்கு காரணம்
களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இந்த ஐந்தும் நின்றால் களத்திர தோஷம் என்கின்றனர். லக்னம், சந்திரன், சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1, 2, 4, 7 , 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும். நான்காம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2, 7 - ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8, 12 ஆம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு மாலை மாற்றி போட்டு வணங்கி விரதம் இருந்தால் இந்த தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும். திருமணத் தடை உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடமாலை சாத்தி மேலும் செந்நிற மலர்கள் கொண்டு பூஜைகள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications