அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்; உரிமையாளர் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
மும்பை: மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த பிப் 25-ம் தேதி வெடிகுண்டுகளுடன் நின்றிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கார் தொழில் அதிபர் ஹிரென் மன்சுக் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. ஹிரென் மன்சுக் மும்பை அருகே உள்ள ஓடைப்பகுதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸின் என்பவருக்கு தொழில் அதிபர் ஹிரென் மன்சுக் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அவரது முன்ஜாமீன் மனுவை தானே மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அம்பானி வீடு அருகே பரபரப்பு
மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த பிப் 25-ம் தேதி வெடிகுண்டுகளுடன் நின்றிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரில் சக்தி வாய்ந்த 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. அந்த காரின் பதிவு எண் குறித்து விசாரித்தபோது தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஹிரென் மன்சுக் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது. கார் திருடு போனதாக போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காரின் உரிமையாளர் மரணம்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர் காரை நிறுத்துவது தெரிந்தது.. ஆனால் அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. மேலும் மும்பை நகருக்குள் அந்த கார் செல்வதும், அதைத் தொடர்ந்து ஒரு இன்னோவா கார் செல்வதும் சிசிடிவி கேமரா காட்சிகளில் தெரியவந்தது. இதற்கிடையே அந்த காரின் உரிமையாளர் திடீரென மரணம் அடைந்தார்.
மனைவி குற்றச்சாட்டு
அவரது உடல் மும்பை அருகே உள்ள ஓடைப்பகுதியில் மீட்கப்பட்டது. இறந்துபோன ஹிரென் மன்சுக் தொழில் அதிபர் ஆவார். பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நான்கு மாதங்களுக்கு வாகனம் காவல்துறைக்கு வழங்கப்பட்டதாக ஹிரென் மன்சுக் மனைவி குற்றம் சாட்டினார். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு கார் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உதவி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு
மாநில பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) தொழில் அதிபரின் மரணம் மற்றும் காரின் திருட்டு குறித்து விசாரித்து வருகிறது. உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸின் என்பவருக்கு தொழில் அதிபர் ஹிரென் மன்சுக் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிசும் சச்சின் வாஸியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று சச்சின் வாஸிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில் சச்சின் வாஸி தானே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் ஆதாரமற்றது என்றும் ஹிரென் மன்சுக் காணாமல் போய் மரணமடைந்த நேரத்தில் தான் தெற்கு மும்பையில் டோங்ரியில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் இந்த ஜாமீன் மனுவை தானே மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.