லவுட் ஸ்பீக்கர் ஒரு சமூக சிக்கல்..ரம்ஜான் பண்டிகையை தடுக்காதீங்க.. ஆரத்திக்கும் ராஜ்தாக்கரே தடை
மும்பை: வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் மே 3-ல் ஆரத்தி வழிபாடு நடத்த வேண்டாம்; இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொன்டாடட்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே திடீரென அறிவித்துள்ளார்.
மதவழிபாட்டுத் தலங்களில் கூம்புவடிவ ஒலி பெருக்கிகளை அகற்றும் விவகாரம் மகாராஷ்டிராவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசு இது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருந்தது. ஆனால் பாஜக இந்த கூட்டத்தைப் புறக்கணித்தது.

முன்னதாக தானே மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பேரணியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்தாக்கரே, மே 3-ந் தேதிக்குள் மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை மகாராஷ்டிரா அரசு அகற்றவில்லை எனில் மசூதி முன் அனுமன் பாடலை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிப்போம் என எச்சரித்திருந்தார். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அத்துடன் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்; இதற்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜ்தாக்கரே புதிய பஞ்சாயத்தை கிளப்பி இருந்தார். இந்நிலையில் ராஜ்தாக்கரே தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராஜ்தாக்கரே தமது ட்விட்டர் பக்கத்தில், மசூதிகளில் மே 3-ந் தேதி வரை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற கெடு விதித்திருந்தோம். நாளை இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டும். அந்த நிகழ்வுகளை தடுக்க வேண்டாம். அதேபோல் ஆரத்தி பாடல்களை ஒலிக்க செய்யவும் வேண்டாம். கூம்பு வடிவ ஒலி பெருக்கி என்பது சமூக பிரச்சனை; மதம் சார்ந்தது அல்ல; அடுத்த கட்ட போராட்டத்தை ட்விட்டரில் அறிவிக்கிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications