தமிழக பாஜக நிர்வாகிகளுடன் வீடியோவில் உரையாடிய மோடி.. நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அட்வைஸ்
நாமக்கல்: தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களின் பட்டியலை பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ மூலமாக மோடி உரையாடிய போது வெளியிட்டார்.
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பாஜக புது வியூகம் வகுத்து வருகிறது. இதனால் பிற கட்சிகள் ஆச்சரியத்தில் உள்ளன.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பாஜக சற்று எதிர்பார்க்காத அளவுக்கு பேரிடியாக அமைந்து விட்டது.
இதையடுத்து அடுத்து வரும் பொதுத் தேர்தலில் இந்த தோல்வி எதிரொலிக்கும் என்பதால் பாஜக இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பாஜக முடிவு
நாமக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
உரையாடல்
அதனடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கருத்துகளை பரிமாற முடிவு செய்துள்ளார். இதற்காக பல்வேறு மாநில பாஜகவினருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்தும், தொண்டர்களை உற்சாகப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாடுகிறார்.
|
பிரதமர் மோடி
தமிழகத்தில் சேலம், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளில் இருந்து தேர்தல் பூத் கமிட்டி அளவிலான நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு அந்தந்தத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு, கவின் மஹாலில் இன்று நடைபெற்றது.
நலத்திட்டங்கள்
பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் பட்டியலை வெளியிட்டார். நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுமாறு நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
நடவடிக்கை
நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து தங்கள் கருத்துகளை பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர். பாஜகவின் இந்த நடவடிக்கை அனைத்து அரசியல் கட்சியினரிடையேயும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.