ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வாகின்றனர்?
அதிமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் யாரும் செய்யாத நிலையில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேறு யாரும் போட்டியிடாவிட்டால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
'ஓபிஎஸ்-இபிஎஸ் தூண்டுதலில் தாக்கினர்’ தாக்கப்பட்ட அதிமுக தொண்டர் புகார்: 12 பேர் மீது போலீஸ் வழக்கு
அதிமுக உட்கட்சித்தேர்தல்
அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளை களைய கடந்த 3 நாட்களுக்கு முன் செயற்குழு கூடி கட்சி விதியில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றாக போட்டியிடுவார்கள் அவர்களை ஒற்றை வாக்கின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வர் என திருத்தப்பட்டது. தேர்தல் டிச.7 அன்று நடக்கும் வேட்பு மனுதாக்கல் 3,4 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி, ஓபிஎஸ்-இபிஎஸ்சுக்கு நோட்டீஸ்
இந்த தேர்தல் முறைகேடாக நடக்கிறது உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை ஆகவே தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. ஆனாலும் முறைகேடு நடந்தால் தேர்தல் முடிவுக்கு தடைவிதிக்க நேரிடும் என எச்சரித்து ஓபிஎஸ், இபிஎஸ், பொன்னையன் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் இல்லை வந்தவருக்கும் அடி உதை
வேட்புமனு தாக்கல் நேற்று காலை தொடங்கிய நிலையில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராத நிலையில் ஓட்டேரியைச் சேர்ந்த எம்ஜிஆர் காலத்து தொண்டர் ஓம்பொடி பிரசாத் சிங் (71) என்பவர் வேட்புமனுவை வாங்க வந்தார். அவரிடம் உரிய தகுதி இல்லாததால் திருப்பி அனுப்பினர். வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தயாரானபோது தாக்கப்பட்டார், வாசல்வரை அவரை துரத்திச் சென்று தாக்கினர். போலீஸார் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு
அவரது புகாரைப்பெற்ற போலீஸார் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், மனோகரன் உள்ளிட்ட 12 பேர் மீது 143,148,341,323,427 5 IPC பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபிஎஸ், இபிஎஸ் மீது ஓம்பொடிபிரசாத் சிங் புகார் அளித்திருந்தாலும் வழக்கில் அவர்கள் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது.
ஓபிஎஸ்- இபிஎஸ் வேட்புமனு தாக்கல்
இந்நிலையில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கட்சித் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு வந்தனர். அவர்கள் வருவதை அறிந்து கட்சி அலுவலகத்துக்கு வந்த தொண்டர்கள் வரவேற்று கோஷமிட்டனர். சிலர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
Recommended Video
போட்டியின்றி தேர்வு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். அவர்கள் மனுவை பொதுக்குழு உறுப்பினர்கள் முன் மொழிந்தனர், பின்னர் வழி மொழியப்பட்டது. இன்று மதியம் 3 மணிவரை வேட்புமனுதாக்கல் செய்யும் நேரம் உள்ளது. இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால் நாளை வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். போட்டியிட யாரும் இல்லாததால் அவர்கள் தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பர்.