பீகாரில் தொடரும் அதிர்ச்சி.. கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பரிதாப பலி.. போலீஸ் தீவிர விசாரணை!
பாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு பீகாரில் இருக்கும் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரான் மாவட்டங்களில் 24 பேர் பலியாகி உள்ளனர்.
வடக்கு பீகாரில் சமீப நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகி வருகிறார்கள். இங்கு பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடைகளை நடத்த கட்டுப்பாடு உள்ளது. சில மாவட்டங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது.
இதனால் பல்வேறு இடங்களில் புற்றீசல் போல கள்ளச்சாராய கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 28ம் தேதி ஹூச் பகுதியில் 8 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள்.

பலர்
இதில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல் கடந்த ஜனவரியில் இருந்து அக்டோபர் 31 வரை 70 பேர் அங்கு கள்ளச்சாராயம் குடித்து பலியாகி உள்ளார். இந்தியாவிலேயே கள்ளச்சாராயம் காரணமாக அதிக பேர் பலியாகும் மாநிலங்களில் பீகார் முன்னிலை வகிக்கிறது.

பீகார்
பீகாரில் நவாடா, மேற்கு சாம்பிரான், முஸாபர்நகர், ஸ்வான், ரோஹ்டாஸ் ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 40 மணி நேரத்தில் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு பீகாரில் இருக்கும் கோபால்கஞ்ச் பகுதியில் 22 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

காரணம்
இன்னும் பலர் உடல் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் எல்லோரும் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 10 நாட்களில் கள்ளச்சாராயம் காரணமாக மக்கள் பலியாவது பீகாரில் இது மூன்றாவது முறையாகும். பலியான 24 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விஷம்
இவர்கள் உருவாக்கிய கள்ளச்சாராயத்தில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோபால்கஞ்ச், சாம்பரான் மாவட்டங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications