"மிஷன் ஆப்போசிஷன்".. தேசிய அரசியலில் மெகா திருப்பம்.. ராகுலை சந்தித்த நிதிஷ் குமார்.. என்ன நடந்தது?
பாட்னா: தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ளார். எதிர்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கான சந்திப்பாக இது பார்க்கப்படுகிறது.
பீகாரில் சமீபத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி முறிந்தது. கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜேடியூ நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவுடன் கூட்டணி வைத்தார்.
இரண்டு கட்சிகளும் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்தது. பாஜகவுடன் ஏற்பட்ட மோதல், கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்ததாக கூறப்பட்டது.
அதே சமயம் தேசிய அளவில் நிதிஷ் குமார் அரசியல் செய்ய விருப்பப்படுகிறார். முக்கியமாக பிரதமர் தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் விரும்புகிறார். அதன் காரணமாக அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.
2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராகும் நிதிஷ்? ராகுல் உடனான சந்திப்புக்கு பின் அவரே சொன்ன பரபர தகவல்
சந்திப்பு
இந்த நிலையில்தான் சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் கே சந்திர சேகர ராவுடன் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டுவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. தேசிய அளவில் மூன்றாவது கூட்டணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நிதிஷ் குமார் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
மிஷன் ஆப்போசிஷன்
மிஷன் ஆப்போசிஷன் என்ற பெயரில் நிதிஷ் குமார் முக்கியமான திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் எதிர்க்கட்சிகளை ஒன்றாக பாஜகவிற்கு எதிராக அவர் திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டே அவர் ராகுல் காந்தியை சந்தித்தாக கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றி இவர்கள் ஆலோசனை செய்து உள்ளனர். இதில் தனக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை, ஆனால் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று நிதிஷ் குமார் சொன்னதாக கூறப்படுகிறது.
மாநில கட்சிகள்
மாநில கட்சிகளை முடக்குவதற்கு பாஜக முயன்று கொண்டு இருக்கிறது. என்னுடைய வேலை எல்லாம் இந்த மாநில கட்சிகளை ஒன்றாக ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதுதான். எனக்கு பிரதமர் ஆகும் விருப்பம் இல்லை என்று நேற்று ராகுல் காந்தியை சந்தித்த பின் நிதிஷ் குமாரும் செய்தியாளர்களிடம் பேசினார். தேசிய அளவில் புதிய "மகா பந்தன்" கூட்டணியை உருவாக்க இவர் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக வரும் நாட்களில் பல்வேறு அரசியல் தலைவர்களை இவர் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் தலைவர்கள்
இந்த நிலையில்தான் எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதை விரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் கடும் மோதல் உள்ளது, சிபிஎம், சிபிஐ கட்சிகள் காங்கிரசை விரும்பாது, திரிணாமுல் கட்சியும் காங்கிரசுடன் இணைய விரும்பாது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பாது. இந்த நிலையில் ராகுலை நிதிஷ் குமார் சந்தித்தது மாற்றத்தை ஏற்படுத்துமா, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.