கொரோனாவிலிருந்து பாதுகாக்க இலவச மாஸ்க்.. புதுச்சேரியில் அதிமுக அசத்தல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கையிருப்பு இல்லை என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 40 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரி அதிமுக சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
வாணரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், அப்பகுதியில் வீடுகளில் உள்ள பொதுமக்கள், சாலைகளில் செல்வோர், மீன் விற்பனை செய்யும் பெண்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் என அனைவருக்கும் முக கவசங்களை வழங்கினார். மேலும் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் நகரில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் முக கவசம் இருப்பு இல்லை.
இதை ஏற்பாடு செய்து தர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், அரசு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.