புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பது திடீரென ரத்தானது.. ஆளுநர் கிரண்பேடியால் இழுபறி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் செவ்வாய்க்கிழமையன்று (மே 19) மதுபானக் கடைகள் திறக்கப்பட இருந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் கிடைக்காததால் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 3 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்ததால் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக்கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் மதுவுக்கு பெயர்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு தளர்வு அளித்தபோதிலும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மாநிலத்தின் வருவாய் பெருமளவு குறைந்தது. அதேபோல் புதுச்சேரியை சேர்ந்த குடிகாரர்கள் அண்டை மாநிலமான தமிழகத்திற்கு சென்று மது அருந்த தொடங்கினர். இதனால் புதுச்சேரியின் வருவாய் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, குடிகாரர்களால் புதுச்சேரியில் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டது.
இதனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் மதுபானக்கடைகளை திறப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சாராம், கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மொத்த விற்பனை கடைகள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் விற்பனை நேரம் நிர்ணயிக்கப்பட்டு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் இரவு அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மற்ற மாநிலங்களை போல் புதுச்சேரி மாநிலத்திலும் மதுபானத்திற்கு கூடுதலாக கோவிட் வரி விதிக்கப்பட உள்ளதால், அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை.
அதனால் செவ்வாய்க்கிழமையன்று மதுக்கடைகளை திறக்க இயலாது. எனவே ஆளுநரின் ஒப்புதல் வந்தவுடன், அரசாணை வெளியிடப்பட்டு புதன்கிழமை முதல் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என குடிகாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமியின் அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.