அதிமுக பலத்தோடு இருக்க வேண்டும்.. இனியாவது நல்ல முடிவு எடுங்க.. பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ்
ராமநாதபுரம்: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது அதிமுக நிர்வாகிகள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும், எப்போதும் போல அதிமுக பலத்துடன் திகழ வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணியாக பிரிந்து செயல்பட்டனர். இந்த நிலையில் இபிஎஸ் தரப்பில் கடந்த ஜூலை 11 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒபிஎஸ், இபிஎஸ் இணைந்துதான் பொதுக்குழு கூட்டம் வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆணையளரை நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பால் உற்சாகமடைந்த ஓ.பி.எஸ். தரப்பினர், பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி தரப்பினர், தீர்ப்பு குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் எடப்பாடி தரப்பினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது, இனிமேல் அதிமுக நிர்வாகிகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியவதாவது : அதிமுக வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது அதிமுக நிர்வாகிகள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி, எப்போதும் போல பலத்துடன் திகழ வேண்டும். இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
முதல் அமைச்சர் ஸ்டாலின் பாஜகவோடு குறைந்தபட்ச சமரசத்திற்கு கூட தயாராக இல்லை என்று கூறியிருக்கிறாரே என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், இவரிடம் சமரசத்திற்கு வாங்க என்று யார் கேட்டது. திமுகவை பாஜக ஒன்றும் சமரசத்திற்கு அழைக்கவில்லை. நாங்கள் திமுகவோடு சமரசத்திற்கு செல்லவில்லை. சமருக்கு தான் தயாராக இருக்கிறோம். இதேபோல ஆட்சி நிலை நீடித்தால் விரைவில் திமுக ஆட்சி போய்விடும் என்று பொன். ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.