இராமநாதபுரம் மாணவர் மர்ம மரணம்... ட்விட்டரில் டிரெண்டாகும் #JusticeForManikandan
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதால் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சய் உடன் மாலை 4.30க்கு முதுகுளத்தூர் வந்துள்ளார்.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் 20 வீடுகள் இடிந்து சேதம் - 2 பேர் பலி
போலீசார்
கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். மாணவனை விரட்டிப்பிடித்து போலீஸார் மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
கல்லூரி மாணவர் மர்ம மரணம்
இதனையடுத்து காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்துப் பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் போலீசார் தரப்பில் இருந்து பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
போலீசார் தாக்கியதாக புகார்
இதையடுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள், கிராமத்தினர் அரசு மருத்துவமனை வாயிலில் முதுகுளத்தூர்- பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கீழத்தூவல் காவல் ஆய்வாளர் லட்சுமி ,எஸ்பி தனிப்பிரிவு போலீசார் ஐயப்பன், காவலர்கள் செந்தில், பிரேம்குமார் ,லட்சுமணன், கற்பகம் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என மணிகண்டனின் தம்பி அலெக்ஸ் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.
காவலர்கள் மீது வழக்குப்பதிவு?
இதையடுத்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை மற்றும் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
டிவிட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForManikandan
இந்நிலையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதேபோல் பேஸ்புக்கிலும் மனிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் போடப்பட்டுள்ள நிலையில், இந்திய அளவில் இந்த ஹேஸ்டேக் முதலிடத்தில் உள்ளது.