இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் - நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!
ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை அடித்து நொறுக்குவதோடு, மீனவர்களின் வலைகளை அறுப்பதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்கள் தொடர்ந்து அரங்கேறிதான் வருகிறது.
அந்த வகையில், தற்போது, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளையும் வெட்டி சேதப்படுத்தி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
மேலும், மீனவர்களின் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மீன்பிடிக்க முடியாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர். ஒரு படகிற்கு குறைந்தது 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் செய்வதறியாது கவலையில் உறைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த தொடர் அராஜக நடவடிக்கைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதப்படுத்திய சம்பவம், மீனவ கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு