உன்னால் முடியும் தம்பி... கமல் 'நம்பி' கொடுத்த சீட்.. உறுதி தளராமல் 'போராடும்' மாற்றுத்திறனாளி!
திருவாடானை: தமிழக சட்டமன்ற தேர்தலில், திருவாடானை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்றுத்திறனாளி வேட்பாளர் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில், கடந்த 2016 தேர்தலில் நடிகர் கருணாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியது. கருணாஸ் வெற்றிப் பெற்றாலும், அவருக்கு அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக, தொகுதிக்குள்ளேயே அவர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
பின்பு காவல்துறை பாதுகாப்புடன் தொகுதிக்கு சென்று வந்தார். அதிமுகவினரின் ஒத்துழைப்பு இல்லதால் தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை தன்னால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என கருணாஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
நேரடி மோதல்
இதனால் ஆளும் கட்சி மீது, இத்தொகுதியில் அதிருப்தி அலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருவாடானை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.எம்.கருமாணிக்கம் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக சார்பில், கே.சி. ஆணிமுத்து இங்கு போட்டியிடுகிறார். இங்கு திமுக கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் நேரடி மோதல் நிலவுகிறது. திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தேவர், யாதவர், முஸ்லீம், தேவந்திரகுல வேளாளர், உடையார் என பல சமூக மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
எம்.பி.ஏ.பட்டதாரி
அதேசமயம், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு கமல்ஹாசன் வாய்ப்பளித்திருக்கிறார். திருவாடானை தொகுதியில் உள்ள மோர்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் சத்யராஜ். எம்.பி.ஏ.பட்டதாரியான இவர் ஒரு மாற்றுத்திறனாளியும் கூட. திருவாடானை பகுதி மக்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வரும் சத்யராஜ், உள்ளூரில் நன்கு அறியப்பட்டவர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளார்.
அசராமல் வாக்கு சேகரிப்பு
இந்த நிலையில் தான் இவரது செயல்பாடுகள் குறித்து விசாரித்த கமல்ஹாசன், கடும் சவால் நிறைந்த இத்தொகுதியில் சத்யராஜுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். காங்கிரஸ், அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் சூழலில், திருவாடானை தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் அசராமல் ஏறி இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு ஆதரவாக அங்கு பல மாற்றுத்திறனாளிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவி சாய்க்குமா?
வெற்றியோ, தோல்வியோ.. நிச்சயம் இந்த திருவாடானை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்ற தளராத நம்பிக்கையோடும், மன உறுதியோடும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் சத்யராஜ். எனினும், சமூக வாக்குகள் நிறைந்த திருவாடானை தொகுதி இவரின் குரலுக்கு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.