பெட்டிக்கடை.. உள்ளே நடந்தது எல்லாம் குட்கா சப்ளை.. சிக்கிய இந்து முன்னணி தலைவர்!
சேலம் : தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்று வந்த இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்தும் ஸ்ரீதர் என்பவரை வாகன தணிக்கையில் போது போலீசார் பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 9 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கியதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
சாமி பற்றி பேசினாலே சங்கினு சொல்றாங்க! ராஜராஜ சோழன் இந்து தான்! வெற்றிமாறனை விடாத ’பாஜக’ பேரரசு!
போதை தடுப்பு வேட்டை
தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனையை முற்றாகத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 அதிரடி திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு கையில் எடுத்துள்ளார். அதன்படி பல்வேறு இடங்களில் போதைப்பொருள் ரெய்டுகள் நடத்தப்பட்டு, கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ரெய்டு
இந்நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டையில் மளிகைக்கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவராக உள்ளார். இந்த நிலையில் அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்யும் ஸ்ரீதர் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்து முன்னணி தலைவர்
அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் 9 கிலோ அளவில் இருந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை, இந்து முன்னணியின் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார்.
கிருஷ்ணமூர்த்தி கைது
இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிகரெட் வியாபாரி ஸ்ரீதர் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனையில் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.