அந்த வார்டுகள் தான் வேண்டும்! காங்கிரஸ் பிடிவாதம்! விட்டுத் தராத திமுக! சிவகங்கை கூட்டணி கலாட்டா!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எதிர்பார்த்த வார்டுகளை ஒதுக்க திமுக முன்வராததால், காங்கிரஸ் தனித்து போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் தனித்து பிரச்சாரத்தை துவக்கி கூட்டணியில் குண்டை வீசியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மொத்தம் 27 வார்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலைத்துறையில் ஒரு கண் வைக்கும் மோடி அரசு.. பட்ஜெட்டில் அதற்கு மட்டும் இவ்வளவு நிதி ஒதுக்கீடா?
நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக -காங்கிரஸ் இடையே இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பெரியகருப்பன் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடப்பங்கீடு இறுதி செய்து வருகிறார்.
மானாமதுரை நகராட்சி
மானாமதுரை நகராட்சியில் குறிப்பிட 6 வார்டுகளை காங்கிரஸ் கேட்ட நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என திமுக தரப்பில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சஞ்சய்காந்தி, புருஷோத்தமன் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் தனித்து ஓட்டுக் கேட்டு பிரச்சாரத்தை நேற்று தொடங்கிவிட்டனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் திமுக -காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ப.சிதம்பரம் ஊர்
சிவகங்கையை பொறுத்தவரை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சொந்த மாவட்டம் என்பதால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வலிமையான கட்டமைப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் மாவட்ட வாரியாக காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உள்ளனர்.
பல இடங்கள்
சிவகங்கை மாவட்டத்தை போல் திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி என பல இடங்களில் திமுக -காங்கிரஸ் இடையேயான இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்பது கவனிக்கத்தக்கது.ச்