முள்ளியவளை பாரதி சிறுவர் இல்ல நிறைவு விழா நிகழ்ச்சித் தொகுப்பு
முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி , நிறைவுவிழா நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு ஆரம்பமாகிய இவ்விழாவானது இல்லச் சிறுமிகளின் மிக அழகான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
இவ்விழாவில் இல்லத்தின் தந்தையும், நெர்டோ நிறுவன செயலருமான திரு.பத்மநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பித்த பெருமக்கள்:
வைத்திய கலாநிதி திரு.ஜெயகுலராஜா, முள்ளியவளை தண்ணீர் ஊற்று ஆலய தலைமை குருக்கள், அருட்தந்தை திரு.வின்சன் அடிகளார், லண்டனைச் சேர்ந்த திரு.சண்முகசிவம், கிராம சேவையாளர் திரு.கிருஸ்ணமூர்த்தி, முள்ளியவளை சைவப்பாடசாலை அதிபர் திருமதி.கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடம் பெற்ற நிர்வாகிகள்:
மேலும், வித்தியானந்தாக் கல்லுாரி ஆசிரியர் திரு.கோகிலதாஸ், கோசலா ஜவுளிக்கடை உரிமையாளர் திரு.தேவராஜா, முள்ளியவளையின் தலைமை காவல்துறை அதிகாரி திலகரட்ண, சிறுவர் இல்லத்தின் ஆங்கில ஆசிரியர் திரு.வன்னியசிங்கம், பாரதி, செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுமிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விளக்குடன் தொடக்கம்:
கும்பம், விளக்கேற்றி வரவேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது. குத்து விளக்கினை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர்.
கடவுள் வணக்கம்:
இதனைத் தொடர்ந்து கடவுள் வணக்கத்தின் பின்னர் ஆசியுரையை தண்ணீரூற்று ஆலய குருக்களும், அருட்தந்தை திரு.வின்சன் அவர்களும் வழங்கினர். இவர்கள் தமது ஆசியுரையில் இல்லத்தின் பணிகள் மேன்மேலும் சிறக்கவும், சிறுவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தியதுடன் இவ்வாறான ஒரு இல்லம் உருவாகி சிறுவர்கள் இனிதே பராமரிக்கப்படுவதற்கும், சிறுவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமான திரு.பத்மநாதன் அவர்களை பாராட்டினர்.
வரவேற்புரை:
தொடர்ந்து பாரதி இல்லத்தின் சிறுமிகளால் பாரதி இல்லத்தின் பாடல் இசைக்கப்பட்டு, அழகான வரவேற்பு நடனத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்புரையை பாரதி சிறுவர் இல்லத்தின் முதன்மை செயலாளர் திரு.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் வழங்கினார்.
தலைமை உரை:
தொடர்ந்து மருத்துவர் திரு.ஜெயகுலராஜா அவர்கள் தலைமையுரையை வழங்கினார். அவர் தனது உரையில் மிக நெருக்கடிகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த இல்லமானது இரண்டாம் வருட முடிவில் மிக உன்னதமாக வளர்ந்துள்ளது கண்டு தான் பெருமைப்படுவதாக உரையாற்றினார்.
தாயாய் கவனிக்கும் இல்லம்:
இந்த இல்லமானது பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, உறவினர்களுக்கு நிகராக பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது எனப் பாராட்டினார். இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாக பல சிரமங்களுக்கு நடுவில் நிதிகளை பெற்று இந்த இல்லத்தை ஒழுங்கமைத்து நடத்திவரும் திரு.பத்மநாதன் அவர்களை வாழ்த்தினார். பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்குகொள்ளும் அனைவரையும் பாராட்டினார். குறிப்பாக இல்லத்தின் நிர்வாகிகளை வாழ்த்தினார்.
சிறப்புரை ஆற்றிய பத்மநாதன்:
அடுத்து பாரதி இல்ல சிறுமியின் ஆங்கில கவிதையைத் தொடர்ந்து சிறப்புரையை திரு.பத்மநாதன் அவர்கள் வழங்கினார். இது சிறுவர்களுக்கான அறிவுரைகளாக அமைந்தது.
குழந்தைகளின் பாதுகாப்பு:
தொடர்ந்து பெற்றோர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணிகளால் சமூகத்தில் காணப்படும் முக்கிய பிரச்சனையாக சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தன்னால் முடிந்தவரை இப்படியான குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கென்று ஒரு எதிர்காலத்தை உருவாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.
சிறுவர்களின் வளர்ச்சி:
அதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த திரு.சரத் சந்திரதாஸ் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது. இவர் தனது உரையில் சிறுவர்களின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு உரையாற்றினார். மாணவர்கள் நம்பிக்கையாக செயல்பட வேண்டும் என சுட்டிக்காட்டி உரையாற்றியதுடன் அருமையான கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
நேர்த்தியான நடனம்:
அதனைத் தொடர்ந்து சிறுமி சுசானியின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. மிக நேர்த்தியாக நடனத்தை வழங்கிய சிறுமியின் திறமையை பலரும் பாராட்டினர். இச்சிறுமியை பாரட்டிய இல்லத்தின் தந்தையான திரு.பத்மநாதன் அவர்கள் சிறுமியை பாராட்டி பரிசும் வழங்கினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் செய்த அனைவரையும் திரு.பத்மநாதன் அவர்களும், திரு.ஜெயகுலராஜா அவர்களும் பாராட்டினர்.
கர்ணன் நாடகம்:
தொடர்ந்து கர்ணன் நாடகம் இடம்பெற்றது. கர்ணனின் வள்ளல் தன்மையை பெருமைப்படுத்துவதாக அமைந்த இந்நாடகத்தில் சிறுமிகள் தமது திறமையை வெளிப்படுத்தி உரிய ஆடை அலங்காரத்துடன் சிறப்பாக நடித்தனர். குறிப்பாக குந்தி, கர்ணன், கண்ணன் பாத்திரங்களை ஏற்ற சிறுமிகள் சிறப்பாக நடித்தனர். அனைவரும் இந்த நாடகத்தை பாராட்டினர்.
நன்றியுரையுடன் விழா நிறைவு:
தொடர்ந்து இல்லத்தின் நிர்வாகி திருமதி.மகேஸ்வரி அவர்களின் நன்றியுரையுடன் விழாவானது மாலை 6.15 அளவில் இனிதே நிறைவுபெற்றது.