ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுவிக்கும் ஜெ. முடிவுக்கு 50% பேர் ஆதரவு: சி.என்.என். ஐபி.என்
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முடிவுக்கு தமிழகத்தில் 50% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறது சி.என்.என். ஐபி.என் கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது சி.என்.என். ஐபி.என்- லோக்நிதி- தி வீக் கருத்து கணிப்பு. இதில் தமிழகத்தில் அதிமுக அணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் எந்தெந்த பிரதேசங்களில் எந்த அணி முன்னணி வகிக்கும் என்பது உள்ளிட்ட கணிப்புகளையும் இது வெளியிட்டிருக்கிறது.
7 தமிழர் விடுதலை.க்கு 50% பேர் ஆதரவு
இதேபோல் ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் ஜெயலலிதாவின் முடிவுக்கு 50% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.
31% பேர் கருத்து தெரிவிக்கவில்லை
19% பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 31% எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.
மத்திய அரசு மீது உச்சகட்ட அதிருப்தி
தமிழகத்தில் மத்திய அரசு மீதான அதிருப்தி மிக அதிகமாக இருக்கிறது என்கிறது கருத்து கணிப்பு. லோக்சபா தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று 58% பேர் கூறியுள்ளனர்.
19% பேர் மட்டுமே காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு
19% பேர் மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையலாம் எனக் கூறியுள்ளனர். 24% பேர் எந்த வித கருத்தும் தெரிவிக்கவிரும்பவில்லையாம்.
தமிழகத்தின் முதன்மை பிரச்சனை...
தமிழகத்தின் முதன்மை பிரச்சனையாக விலைவாசி உயர்வுதான் இருக்கிறது என 20% பேரும் மின்சாரம்தான் என 13% பேரும் கூறியுள்ளனர். ஊழல் விவகாரம்தான் முதன்மை பிரச்சனை என 12% பேரும் வேலைவாய்ப்பின்மைதான் என 5%, குடிநீர் பிரச்சனை என 4% கூறியுள்ளனர் என்கிறது கருத்து கணிப்பு.