பி.ஆர்.பி கிரானைட் பாலீஸ் ஆலையில் சோதனை: 8 இயந்திரங்களுக்கு சீல்
மதுரை: பிஆர்பி பாலீஷ் ஆலையிலிருந்து கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாகவும், சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்துமீறி நுழைந்து 400 பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் ஆட்சியருக்கு வந்த புகாரின்பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி இயந்திரங்களுக்கு சீல் வைத்தனர். அவற்றின் மதிப்பு 8 கோடி ரூபாய் என்று போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மதுரையை தவிர இதர மாவட்டங்களில் பிஆர்பி குவாரிகளை செயல்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் பாலிஷிங் ஆலையில் விதிமீறி கட்டிடம் கட்டப்பட்டதாக ஆலையில் 2 அலுவலங்களுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது ஆலையின் பிற பகுதிகளை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதித்தும் இயங்காமல் இருந்தது.
இந்நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள பிஆர்பி கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையில் ஒருவாரமாக இரவு நேரத்தில் ஏராளமான விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன.இங்கு ஏற்கெனவே அரசு குறியீடு செய்துள்ள கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாகவும், 400 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு புகார் வந்தது.
ஆட்சியர் உத்தரவின்பேரில் மதுரை கோட்டாட்சியர் செந்தில்குமாரி, மேலூர் தாசில்தார் மணிமாறன், கூடுதல் எஸ்பி. ஜான்ரோஸ் தலைமையில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை பிஆர்பி பாலீஷ் ஆலைக்கு சென்றனர்.
இத்தகவலை முன்கூட்டியே அறிந்திருந்த பிஆர்பி வழக்கறிஞர்கள் தொழிற்சாலை முன் கூடினர். அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க மறுத்த வழக்கறிஞர்கள், தொழிற்சாலைக்கு சீல் ஏதும் வைக்கப்படவில்லை. தொழிற்சாலையை நாங்கள்தான் செயல்படுத்தாமல் உள்ளோம். இதை ஆய்வு செய்ய நீதிமன்ற ஆணை வேண்டும் எனக் கேட்டனர்.
ஏற்கனவே சீல் வைக்கப்பட்டவை சரியாக இருக்கிறதா என பார்வையிடுவதற்காவே வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலைக்குள் இருந்த கற்கள், ஆவணங்கள் இருந்த அறைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். சீல் வைக்கப்பட்ட பொருட்கள் பட்டியலில் உள்ளபடி சரியாக உள்ளதா என கண்காணித்தனர்.
இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர், ஏராளமான இயந்திரங்கள் இயங்காத நிலையிலும் சீல் வைக்கப்படாமலும் இருந்தன. இவற்றுக்கு நேற்று சீல் வைத்தோம்.
ஏற்கெனவே இருந்த பொருட்கள் ஏதும் கடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். இது குறித்து ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக மூன்று கட்ட விசாரணையை முடித்துள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது நான்காவது கட்ட விசாரணையை நேற்று தொடங்கினார். இன்றைய தினம் மேலூர் அருகே கிரானைட் குவாரிகளில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.