பெண்களை இழிவுபடுத்த கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் கோரிக்கை!
சென்னை: யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் கருத்துகளை பதிவிட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னை போலீஸார் விஜய் ரசிகர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.