நியூஸ் 7 கருத்து கணிப்பின்படி அதிமுகவின் இரும்பு கோட்டை மேற்கு மண்டலமே கை நழுவி போகிறதா?
சென்னை: நியூஸ் 7 டிவி மற்றும் தினமலர் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் உண்மை எனில் அதிமுக தற்போதைய சட்டசபை தேர்தலில் மரண அடியை எதிர்கொள்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதிமுகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக திகழும் கோவையை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தை திமுக கைப்பற்றிவிடும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. இக்கணிப்பு உண்மையாக இருந்தால் இதர மண்டலங்களில் திமுகவுக்கு ஆதரவு அலை அமோகமாக வீசுகிறது எனலாம்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலமானது கடந்த பல தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. திமுக மிக பலவீனமாக இருந்து வருகிற மண்டலம் இது.
ஆனால் நியூஸ்7 டிவி- தினமலர் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் இந்த மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 33 தொகுதிகளை திமுகவும் 24 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றும் என கூறுகிறது. அதுவும் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக, பாமகவைத் தொடர்ந்து 3-வது இடம்தான் அதிமுகவுக்கு என்கிறது இக்கருத்து கணிப்பு.
விஸ்வரூப அதிருப்தி அலை?
நியூஸ்7 நடத்திய கருத்து கணிப்பு முடிவு உண்மையாக இருக்குமேயானால் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக மிகப் பெரும் அதிருப்தி அலை மவுனமாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். எங்களது ஆட்சிக் காலத்தில் மின்மிகை மாநிலமாக்கினோம் என அதிமுக தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் தொழில் நிறுவனங்கள் கொத்து கொத்தாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த 'அகதி'நிலை இந்த ஆட்சியில் அரங்கேறியது கண்கூடும். சீரற்ற மின்சாரம், தொழில் தொடங்கவே முடியாத நிலையில் தலைவிரித்தாடிய லஞ்சம் இவைகளால் வெறுத்து போய் கிடந்த கோவை தொழில் நிறுவனங்களுக்கு குஜராத், ஆந்திர மாநிலங்கள் தமிழகத்துக்கு வந்தே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற அவல வரலாறும் இந்த ஆட்சியில் நிகழ்ந்தது.
வேட்பாளர்கள் தேர்வில் சுணக்கம்?
அத்துடன் மேற்கு மண்டலங்களில் அதிமுக அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் பலரும் புதுமுகங்கள்; இது வழக்கமான அதிமுக பாணி இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். வெற்றி வாய்ப்புள்ள நபர்கள் வெளியில் இருக்க; வெளி மாவட்டங்களில் இருந்தும் கூட வேட்பாளர்களை அதிமுக இறக்குமதி செய்திருக்கிறது என்றும் ஆதங்கப்படுகின்றனர் அதிமுகவினர்.
நம்ப மறுக்கும் திமுக
அதே நேரத்தில் நியூஸ்7 நடத்திய இக்கருத்து கணிப்பு முடிவுகள் 'நம்பகத்தன்மையற்றதாக' இருக்கிறது; கோவையில் இப்படியான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்லுகின்றனர் நமது ஒன் இந்தியாவிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத திமுக தலைமை நிர்வாகி ஒருவர். நியூஸ்7 கருத்து கணிப்பு முடிவுகள், கள யதார்த்தங்களுக்கு முற்றிலும் புறம்பாக இருக்கிறது; திமுகவை விட அதிமுக நிச்சயம் கூடுதலான தொகுதிகளைத்தான் பெற வாய்ப்பிருக்கிறதே தவிர இப்படி தலைகீழ் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
இருப்பினும் தொழில்துறை நிறுவனங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் பேரவலத்தை சந்தித்தது என்பது உண்மை; அதற்காக இப்படி அதீதமான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திமுகவுக்கு சாதகம் என்?
அதே நேரத்தில் இக்கருத்து கணிப்பு உண்மை எனில் அதற்கு காரணம் திமுகவின் தேர்தல் அறிக்கை, ஸ்டாலினின் நமக்கு நாமே, ஸ்டாலினின் பிரசார முறை ஆகியவற்றை சொல்லலாம். குறிப்பாக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி பெரும் வரவேற்புக்குரியதாக இருக்கிறது எனலாம். அந்தந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வதும் திமுகவுக்கு சாதகமான ஒன்றாக இருக்கிறது எனலாம்
கோமாளி அணி?
மேலும் நியூஸ் 7 நடத்திய இக்கருத்து கணிப்பு முடிவுகள் உண்மை எனில் அதிமுக மீதான அதிருப்தியை அறுவடை செய்யக் கூடிய வலிமை தேமுதிக- மக்கள் நலக் கூட்டணிக்கு இல்லை என்பதாகவும் இருக்கிறது. இந்த அணி ஒரு 'ரசிக்கத்தக்க' அணியாகத்தான் வாக்காளர்கள் மத்தியில் இருக்கிறதே தவிர ஆட்சி அமைக்க கூடிய வலுபெற்ற ஒரு அணியாக மக்கள் மனதில் இடம்பெறவில்லை என்பதையும் நிரூபிக்கிறது. குறிப்பாக விஜயகாந்தின் அருவருக்கத்தக்க பேச்சு, வைகோவின் எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவுகள் அந்த அணி மீது துளிகூட நம்பிக்கையை ஏற்படுத்தவே இல்லை எனலாம்.
மவுனியாக வேண்டிய பாமக
அதேபோல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அறைகூவல் விடுத்து கொண்டிருக்கும் பாமகவின் வலிமையும் நியூஸ் 7 கருத்து கணிப்பு முடிவுகள் உண்மை எனில் கேள்விக்குறியாக்குகிறதுதான். தருமபுரி, கிருஷ்ணகிரி அளவில்தான் பாமக இருக்கிறது; அதிலும் வெல்லும் வலிமையற்று இருக்கிறது என்ற அரசியல் பார்வையாளர்களின் கருத்தை உறுதிப்படுத்துகிறது இந்த கருத்து கணிப்பு. அதுவும் பென்னாகரத்தில் 'முதல்வர் வேட்பாளர்' அன்புமணி தோல்வியைத் தழுவுவதாக இக்கருத்து கணிப்பு சொல்வது உண்மையெனில் இனி 'முதல்வர் வேட்பாளர்' 'முதல் கையெழுத்து' போன்ற நாடக கோஷங்களை அந்த கட்சி எழுப்பாமல் கனவிலும் நினைக்காமல் இருந்துவிடுவதுதான் எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய ஒன்றிரண்டு சீட்டுகளையாவது தக்க வைத்துக் கொள்வதற்கான சரியான 'பரிகாரமாக' இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.