ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு மக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.. ஸ்டாலின்!
ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீரவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீரவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்த படுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தில் மத்திய அரசு இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துகிறது. இதற்காக நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நள்ளிரவு இதற்கான விழா கொண்டாடப்படுகிறது.
ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று நள்ளிரவு நடைபெறும் நிகழ்ச்சியையும் அவை புறக்கணித்துள்ளன.
ஸ்டாலின் எதிர்ப்பு
இந்நிலையில் ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்வதோடு இல்லாமல் முழுபொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவசர அவசரமாக..
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஒரே நாடு ஒரே வரி" என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக அ.தி.மு.க. அரசு இந்த சட்டத்திற்கு சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, வருகின்ற ஜூலை 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
நிதிநிலை குலைந்துவிட்டது
தமிழகம் ஏற்கனவே வறட்சியில் வாடிக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே வங்கி சேவைகளும், சிறு குறு வர்த்தக நிறுவனங்களும் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பி வரவில்லை. மாநிலத்தின் நிதி நிர்வாகம் நிலை குலைந்து விட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையே சுட்டிக்காட்டியிருக்கிறது.
பதில் சொல்லியே தீர வேண்டும்
இவ்வளவு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அமல்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசு முழுப்பொறுப்பேற்பது மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும்.