தந்தைகளிடம் "சிக்கி" தத்தளிக்கும் தனயன்கள்... வடக்கே அகிலேஷ்... தெற்கே ஸ்டாலின்
சென்னை: நாட்டின் வடபுலத்திலும் தென்புலத்திலும் அரசியல் கட்சிகளின் சாம்ராஜ்யங்களில் அப்பா மகன்களுக்கு இடையே ஒரே நேரத்தில் மல்லுக்கட்டு நடந்து கொண்டிருப்பது சுவாரசியமான ஒரு நிகழ்வுதான்.
உத்தரப்பிரதேசம் எனும் நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வரான அகிலேஷ் யாதவ் கடந்த சில மாதங்களாகவே சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அப்பா முலாயம்சிங் யாதவுடன் போராடிக் கொண்டிருக்கிறார். மகனை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார் முலாயம்.
அகிலேஷ் யாதவோ அப்பாவுக்கு பதிலடியாக, சித்தப்பா சிவ்பால் யாதவின் இலாகாக்களைப் பறித்தார்; சித்தப்பா ஆதரவு அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தார். அப்பாவும் சித்தப்பாவும் கை கோர்க்க தனியே தன்னந்தனியே தத்தளிக்கிறார் அகிலேஷ் யாதவ். இத்தனைக்கும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அக்கப்போர்களால் சமாஜ்வாடி கட்சி மிகப் பெரிய தோல்வியைத்தான் சந்திக்கும் என பீதியில் இருக்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
குடைச்சல் அழகிரி
அதே நிலைமைதான் தமிழகத்திலும்.... கடந்த லோக்சபா தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதியுடன் மகன்கள் ஸ்டாலினும் அழகிரியும் மல்லுக்கட்டினர். ஒருகட்டத்தில் ஸ்டாலின் சீக்கிரம் செத்துபோய்விடுவார் என்றெல்லாம் கருணாநிதியிடம் அழகிரி சொல்ல அவர் கட்சியைவிட்டே தூக்கியடிக்கப்பட்டார். ஸ்டாலின் தரப்புக்கு அப்போது பிடி கிடைத்தது.
கனிமொழிக்கு செக்
இனி ஒருபோதும் அழகிரியை கட்சிக்குள் சேர்த்துவிட வாய்ப்பே தரக் கூடாது என இன்று வரை கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. அதே நேரத்தில் கருணாநிதி குடும்பத்தினரோ எப்படியும் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்த்துவிட துடியாய் துடிக்கிறார்கள்... இதில் கருணாநிதியின் மகள்கள் செல்வியும் கனிமொழியும் அழகிரிக்கு சப்ப்ரோட்.
கருணாநிதி காட்டம்
போதாதா ஸ்டாலினுக்கு.... கனிமொழியையும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விரட்டுவதற்கு வியூகம் வகுத்தார்... விடுவாரா கருணாநிதி... நான் இருக்கும் வரை நானே கட்சி என ஒரே போடாகப் போட்டார்.
ஸ்டாலின் வியூகம்
ஸ்டாலினும் சோர்ந்துபோய்விடவில்லை.. உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்குகிறேன் பாருங்கள்.. என தமாகா, கொமதேக தலைவர்களான வாசன், ஈஸ்வரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்..
கருணாநிதி அதிரடி
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தம்மை சுற்றியே தமிழக அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கும் கருணாநிதி சும்மா விடுவாரா? ஸ்டாலினின் அந்த காய் நகர்த்தல்களுக்கும் செக் வைத்துவிட்டார். ஸ்டாலினும் இப்போதைக்கு கருணாநிதிக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். திமுகவில் நடக்கும் இந்த கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான மோதல் திமுக நிர்வாகிகளை கதிகலங்க வைத்துள்ளது.
அனேகமாக "மகிழ்ச்சியாக" இருக்கும் ஒரே மகன் தைலாபுரத்தார்தான் போல!