ஜெ.வுக்கு எதிரான கட்டுரை.. ஆனந்த விகடனை 'பல்க்கா' வாங்கி இலவசமாக மக்களிடம் விநியோகித்த தி.மு.க.!!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தை மிகக் கடுமையாக விமர்சித்து ஆனந்த விகடன் 11 பக்க கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த ஆனந்த விகடன் இதழை ஆங்காங்கே அப்படியே ஒட்டுமொத்தமாக வாங்கி பொதுமக்களிடம் இலவசமாக கொடுத்து படிக்குமாறு தி.மு.க.வினர் பிரசாரம் செய்து வருவது பரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக கட்சிகளுக்கு எதிரான பத்திரிகை செய்திகள் வந்தால் அக்கட்சியினர் முதலில் அந்த பத்திரிகையை ஒட்டுமொத்தமாக வாங்கி எரிப்பதோ அல்லது பழைய பேப்பர் கடையில் எடைக்கு போடுவதோ வழக்கம். ஒருசில நேரத்தில் இதை பிற கட்சிகள் சாதகமாக்கிக் கொண்டு அந்த செய்திகளை ஜெராக்ஸ் எடுத்தோ, ரீ பிரிண்ட் செய்தோ விநியோகிப்பதும் வழக்கம்..
ஆனந்தவிகடன் கட்டுரை
இந்த வகையில் ஆனந்த விகடன் இதழில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக 11 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது இந்த கட்டுரை.
அதிமுக அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் பல ஊர்களில் ஆனந்த விகடன் பத்திரிகையை ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துவிட்டு மக்களுக்கு சென்று சேராமல் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சில இடங்களில் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் தி.மு.க
அதே நேரத்தில் திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக ஆனந்த விகடன் இதழை வாங்கி அத்தனையையும் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து, ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி படியுங்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
பேருந்து பேருந்தாக ஏறி...
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணை பொதுச்செயலருமான ஐ. பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் தலையில் தி.மு.கவினர் ஆனந்தவிகடனை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து படித்து பாருங்கள் என கூறினர். சளைக்காமல் பேருந்து பேருந்தாக ஏறி ஆனந்தவிகடனை இலவசமாக கொடுத்தனர் தி.மு.க.வினர்.
தி.மு.க.வினரின் இந்த அதிரடியால், நாம முந்தவில்லையே என கதிகலங்கி போயுள்ளனர் திண்டுக்கல் அ.தி.மு.க.வினர்.