தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகள்.. முதல் காட்சி காலை 5 மணிக்கு.. பாகுபலி சாதனை!
சென்னை: உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி, தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆந்திரா, தெலங்கானாவில் மட்டுமல்லாது. இந்தியா முழுவதுமே இந்தப் படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர். அதற்கேற்ப படத்தை தமிழ், தெலுங்கில் நேரடியாகத் தயாரித்துள்ள ராஜமவுலி, மலையாளம் மற்றும் இந்தியில் மொழி மாற்றம் செய்துள்ளார்.
4000 அரங்குகள்
உலகெங்கும் இந்தப் படம் 4000 அரங்குகளில் வெளியாகிறது. ஆந்திராவில் மட்டுமே 1500 அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நேற்றிலிருந்து பாகுபலி ஜூரம் தகிக்கிறது என்றால் மிகையல்ல.
தமிழகத்தில்
ஆந்திராவுக்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும், தமிழகத்தில் ஒரு பெரிய நடிகரின் படத்துக்கு என்ன வரவேற்பு இருக்குமோ அந்த அளவு வரவேற்பும் எதிர்ப்பார்ப்பும் பாகுபலிக்கு உள்ளது.
550 அரங்குகள்
இந்தப் படம் தமிழகம் முழுவதும் 550 அரங்குகளில் வெளியாகிறது. இது கிட்டத்தட்ட ரஜினி படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர் எண்ணிக்கைக்கு சமம். இது தவிர, பாகுபலி தெலுங்கு 50 அரங்குகளில் வெளியாகிறது. பாகுபலி வெளியாவதையொட்டி, தற்போது ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்களின் காட்சி நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அல்லது சில தினங்களுக்கு தூக்கப்பட உள்ளன.
அதிகாலை 5 மணிக்கு காட்சி
ரசிகர்களின் ஆவல் மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க, முதல் காட்சியை அதிகாலை 5 மணிக்கு நடத்திக் கொள்ள சில அரங்குகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. பாகுபலி யுஏ சான்று பெற்ற படம் என்பதால், அரசுக்கு வரியாக 30 சதவீதம் கிடைக்கும்.