புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா...?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்
மதுரை: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இந்து அமைப்பு தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து பண்ணா இஸ்மாயிலை மதுரை சிறைக்கும், போலீஸ் பக்ருதீனை வேலூருக்கும் பிலால் மாலிக்கை சென்னையிலும் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற சில கைதிகளும் கூட சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறைக்குள் நடந்த இந்த சம்பவம் என்கவுண்டருக்கான நாடகமாக இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மது தெரிவித்துள்ளார்.
மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை. சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது, இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும்'' என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.