கின்னஸ் சாதனைக்காக ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர் .. 178வது முறையாக தேர்தலில் நிற்கிறார்
கின்னஸ் சாதனைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்பாளர் ஒருவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
சென்னை : கின்னஸ் சாதனைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்பாளர் ஒருவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் இதுவரை 177 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர் பஞ்சர் கடை வைத்துள்ளார். அதிகமுறை தேர்தலில் போட்டியிட்டு , கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே இவருடைய லட்சியம்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு வருகிறார். மேலும் எப்போது அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பதுமில்லை.
தேர்தல் மன்னன் பத்மராஜன்
தமிழகத்தில் எங்கு தேர்தல் நடைபெற்றாலும் அங்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் பத்மராஜனை தேர்தல் மன்னன் என்றே மக்கள் அழைத்து வருகின்றனர்.
தலைவர்களை எதிர்த்து போட்டி
பத்மராஜன் பிரதமர் மோடி, மன்மோகன் சிங், நரசிம்ம ராவ், கருணாநிதி, ஜெயலலிதா , எடியூரப்பா உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
கின்னஸ் சாதனை முயற்சி
கின்னஸ் சாதனைக்காக தேர்தலில் போட்டியிடும் பத்மராஜன் இதுவரை 177 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தற்போது 178வது முறையாக ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார்.
இவரால் ஏற்பட்ட மாற்றம்
கடந்த 1996ம் ஆண்டு , 5 மாநிலங்களில் 8 தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் காரணமாக சுயேச்சை வேட்பாளர் இரண்டு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. இதேபோல சுயேச்சை வேட்பாளருக்கான டெபாசிட் தொகையும் அதிகரிக்கப்பட்டது.
தோல்வியால் லிம்கா சாதனை
தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்து வரும் பத்மராஜ் , அதன் காரணமாகவே லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறை இடம்பிடித்தார்.
ஆர்.கே நகர் தேர்தலில் போட்டி
இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக இன்று பத்மராஜன் வந்தார். இதையடுத்து தேர்தல் அலுவலர் பத்மஜா தேவியிடம் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.
விஜயகாந்தை எதிர்த்து போட்டி
முன்னதாக பத்மராஜன் ,கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.