சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு டிச. 9 வரை விடுமுறை; நாகை, திருவாரூரில் நாளை
சென்னை: கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடியாமல் இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 9ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்கு இன்று பிற்பகல் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இந்த விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல திருவாரூர் மாவட்டத்திலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 2ம்தேதிவரை பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 14 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பல பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகள், குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றனர். வீடுகளை இழந்தவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், மசூதிகள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் புகழிடமாக மாறியுள்ளன.
வடியாத வெள்ளம்
மழை வெள்ளம் புறநகர் பகுதிகளை மட்டுமல்லாது சென்னை நகரையும் கபளீகரம் செய்துள்ளது. எனவே கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
டிச.9 வரை விடுமுறை
நகரில் வெள்ளம் வடிந்தாலும் சேறும், சகதியும் குப்பைகளும் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மேலும் சில நாட்கள் ஆகும். அதேநேரத்தில் புறநகரில் வெள்ள நீர் வடிந்தபாடில்லை எனவே சென்னை, காஞ்சி, திருவள்ளுர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு மேலும் 2 தினங்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட விடுமுறை
கனமழை காரணமாக கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தீபாவளி நவம்பர் 10ம் தேதி விடுமுறை தினத்தை தவிர கடந்த மாதம் நவம்பர் 26, 27, 28ம் தேதி மட்டுமே கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
நவம்பர் 30ம் தேதி தொடங்கிய கனமழையால் மேலும் 10 தினங்கள் விடுமுறை அறிவிக்கப்படவேண்டியதாகிவிட்டது. இதுவரை தமிழகத்தில் மழைக்காக இத்தனை நாட்கள் விடுமுறை விடப்பட்டதில்லை
அரையாண்டு தேர்வு நடைபெறுமா?
தொடர்மழை காரணமாக தமிழகத்தில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜனவரி முதல்வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து விடுமுறை விடப்படுவதால் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.