மழை பாதித்த சென்னையில் டிராபிக் இப்போது எப்படி இருக்கு?
சென்னை நகரின் சாலைகள் எப்படி உள்ளது, எந்த வழிக்கு எப்படி எளிதில் சென்றடையலாம் இதோ ஒரு டிராபிக் அப்டேட்.
சென்னை : சென்னை நகரில் மழை இல்லாததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் வழக்கம் போல அண்ணாசாலை, வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் இன்று காலை முதல் மழையும் இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிப்பின்றி இருந்தது. ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீர் காரணமாகவும் திடீர் பள்ளங்கள் காரணமாகவுமே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத.
காலை வரை பெய்து தீர்த்த மழையால் சாலைகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றதால் வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. எனினும் மழையால் தேங்கி நின்ற குண்டும் குழியுமான சாலையால் வாகனம் ஓட்டுவதற்கு சிரமாமமானதாகவே உள்ளது.
சென்னையில் மாலை நேரத்தில் எப்போதும் வாகன நெரிசல் இருப்பது போல இன்றும் கோயம்பேடு முதல் அண்ணாசாலை வரை செல்லும் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிகிறது. நந்தனம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்படுகிறது.
நரசிங்கபுரத்திலிருந்து அண்ணாசாலை செல்லும் பாதையும், அரும்பாக்கம் ஷெனாய் நகர் பகுதிகளிலும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கிறது. அண்ணா நகர் ரவுண்டானா, கீர்ப்பாக்கம், வடபழனி, தி நகர், மேற்கு மாம்பலம் பகுதிகளிலும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.
வெள்ள நீரில் மிதக்கும் வேளச்சேரி முதல் மடிப்பாக்கம் வரையிலான சாலைகளிலும், குரோம்பேட்டை பல்லாவரம் பகுதிகளிலும் வாகனங்கள் சாலையில் வரிசைகட்டி நிற்கின்றன. இதே போன்று புறநகர்ப் பகுதியான வானகரத்தில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கிறது. வியாசர்பாடி, வட சென்னை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் இன்னும் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து அந்தப் பகுதியில் நேற்றைய நிலையிலேயே உள்ளது.