மனநல மருத்துவர் சாரதா மேனனுக்கு அவ்வையார் விருது கொடுத்த ஜெ.,
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் மறுவாழ்விற்காக சேவை ஆற்றி வரும் அரசு மனநல மருத்துவ நிலையத்தின் முன்னாள் தலைவரும், ஸ்கார்ப் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-ஆலோசகருமான டாக்டர் எம். சாரதா மேனனுக்கு 2016-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையட்டி "அவ்வையார் விருது" எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் "அவ்வையார் விருது" மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.
டாக்டர் எம். சாரதா மேனன் 3 வருடம் பயில வேண்டிய மனோதத்துவ நிபுணர் படிப்பை 2 வருடங்களில் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் சாரதா மேனன் நாட்டிலேயே முதல் பெண் மனநல மருத்துவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
1961ம் ஆண்டு சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் மென்டல் ஹெல்த்தில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்து, அவரது தலைமையில் மருத்துவ மனையின் ஆய்வுக் கூடம், கட்டட அமைப்பு களை மேம்படுத்தி சீர்செய்து நோயாளி களுக்கு புதிய தொழிற் பயிற்சி அளித்துள்ளார்.
அவர் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டு தினம் நடத்தியதோடு, மனநோயாளிகள் செய்யும் கைவினைப் பொருட்களை கண்காட்சியில் வைத்து, அதன்மூலம் மருத்துவமனைக்கு நிதி திரட்டியுள்ளார்.
மனநோயாளிகளின் நல்வாழ்விற்காக 1984-ஆம் ஆண்டு ஸ்கார்ப் என்ற தொண்டு நிறுவனத்தை டாக்டர் எம். சாரதா மேனன் துவக்கி, மனநோயாளிகளுக்கு தற்காலிக தங்கும் இடவசதி, மேம்படுத்தப்பட்ட மனநல சிகிச்சை முறைகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி அளித்து வருகிறார்.
2016ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு முதல்-அமைச்சர் ஜெய லலிதா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டாக்டர் எம். சாரதா மேனனுக்கு அவரது சிறந்த சமூக சேவையினை பாராட்டி அவ்வையார் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் 2.3.2016 அன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனனுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.