போராட்டம் கூடாது, அமைதி காப்பதே ஜெ.வுக்கு செலுத்தும் உண்மையான அன்பு- ஓ.பி.எஸ் வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்கட்சியினர் விஷமப் பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ள அவர், கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற போராட்டத்திற்கு யாரும் அழைப்பு விடுக்கவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைதி, வளம், வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழகம் அமைதியான சூழலில் வளர்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித்திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றும், மக்களின் அன்றாட பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாண்புமிகு அம்மா அவர்களின் மீதுள்ள அன்பால் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு மேற்கொள்ளும் அறப்போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசை இணைத்துப்பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது.
எதிர்கட்சியினரின் மாயவலையில் சங்கங்கள், அமைப்புகள் யாரும் விழவேண்டாம்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டங்களையும் மாண்புமிகு அம்மா அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் யாரும் ஈடுபடவேண்டாம்.
இதுவே புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மாறாத பாசத்தை, பற்றை, அன்பை வெளிப்படுத்தும் செயல் ஆகும் என்று ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.