செயல்படாத அரசால் மக்களின் உயிரும் உடமையும் பறி போகிறது - முத்தரசன் பொளேர்
மழைத்தடுப்பு நடவடிக்கைகளை முறையாகச் செய்யாததால் மக்களின் உயிர் போகிறது என முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : செயல்படாத தமிழக அரசால் மக்கள் உயிரும், உடமைகளும், உற்பத்தியும் பறிபோகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல இடங்களில் பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை தடுப்பு நடவடிக்கைகளை அரசு சரியாகச் செய்யவில்லை என்று அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இன்று இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், சென்ற ஆண்டு பருவமழை தவறியதன் காரணமாக தமிழகம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியது.
நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியாலும் மரணமடைந்தனர். விவசாயம் முற்றிலும் அழிந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாண்டு பருவமழையை பெரிதும் எதிர்பார்த்த நிலையில் பருவ மழையும் தொடங்கியுள்ளது.
அரசின் அலட்சியப்போக்கு
பருவ மழையை எதிர்பார்த்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பணி அரசுக்கு உள்ளது.ஆனால், பருவமழை எச்சரிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் இந்த மெத்தனப் போக்கால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அவர்களது முழுமையான இழப்பு தெரியவில்லை.
சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலி
கொடுங்கையூரில் பாவானா, யுவஸ்ரீ ஆகிய இரு சிறுமிகள் விளையாடிய போது அறுந்து விழுந்துள்ள மின்கம்பி தாக்கி பலியாகியுள்ளனர். அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகம், மணலகரம் கிராமத்தைச் சேர்ந்த கலிய பெருமாள் என்கிற விவசாயி, தன் வயலில் மழைநீரை வடிய வைக்க சென்ற போது அறுந்து விழுந்துள்ள மின்கம்பி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் துறந்துள்ள துயரச் செய்தி வந்துள்ளது. மரணமுற்ற விவசாயி குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
மோசமான டெல்டா மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் மின் கம்பங்கள் பெருமளவு வயல்வெளிகளில் உள்ளன. கம்பங்கள் பழுதடைந்தும், மின் கம்பிகள் மிகத் தாழ்வான நிலையில் தொங்கிய நிலையிலும் உள்ளது. இவைகள் சரிசெய்யப் பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க படாதநிலையில் இத்துயர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மின் வாரியத்தில் உள்ள காலிபணி இடங்கள் உடன் நிரப்பப் படுவதுடன், நீண்ட காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளவர்களை நிரந்தரம் செய்யவும் தேவையான அளவிற்கு கருவிகள் வாங்கவும் உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.
தூர்வாருவதற்கு நடவடிக்கை
பாசன வடிகால்களை முறையாக தூர்வாராத காரணத்தால், மழைநீர் தேங்கி பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. காலதாமதமாக மேற்கொள்ளப்பட்ட நேரடி விதைப்பின் மூலம் முளைத்த பயிர்களை தட்டுக்கிளிகள் வெட்டி பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள், மீண்டும் உழுவடை செய்து நேரடி விதைப்பின் மூலம் முளைத்த பயிர்கள் இன்று மழை நீர் வடியாமல் முழ்கிய நிலையில் உள்ளது.
செயலற்ற தலைமையின் அரசு
மாநில அரசு தனது சொந்த கட்சி விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில், மக்கள் பிரச்சினைகைள் குறித்து அக்கறையற்ற அரசாக, செயல்படாத அரசாக உள்ளதால் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பறி போகின்றது. உற்பத்தி செய்த விவசாயம் சீரழிகின்றது. ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக் குறியாகின்றது. அரசு தங்களின் சொந்த பிரச்சினைகளுக்கு காட்டும் அக்கறையை மக்கள் பிரச்சினைகளில் காட்ட முன்வர வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.