சக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர்.. "வீர மரணத்தில்" திடீர் திருப்பம்!
Recommended Video
தக்கலை: குமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்ததாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தக்கலை அருகே பருத்திக் காட்டுவிளையை சேர்ந்தவர் வேலப்பன். இவரது மகன் ஜெகன் (38). இவர் 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் தீவிரவாதிகள் சுட்டதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது.
[ திரைத்துறையை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாடகி சின்மயி பாலியல் புகார்! #MeeToo ]
சொந்த ஊர்
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நேற்று காலை குமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு கொண்டு வரப்பட்டது.
ராணுவ வீரரிடம் தகவல்
இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யாததால் உறவினர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து ராணுவ வீரர்களிடம் கேட்டனர்.
விளக்கம்
அப்போதுதான் ஜெகன் மரணம் வீரமரணம் அல்ல என்பதும் சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இதையடுத்து அந்த வீரரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகனின் உறவினர்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூலம் ராணுவ அதிகாரிகளிடம் ஜெகன் சாவில் உள்ள மர்மத்துக்கு விளக்கம் கேட்டுள்ளனர். சக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டதை மறைத்து தீவிரவாதி தாக்குதலால் உயிரிழந்ததாக கூறப்பட்டதால் கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.