கேட்கவே பதறுதே.. சிறுமியை பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரர்! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு செகந்திராபாத் கண்டோன்மென்ட்டில் ஒரு குடும்பம் ஒன்று தங்களது இரண்டு குழந்தைகளுடன் வந்திருக்கிறது. அப்போது டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதனை சரி செய்வதற்கு பெற்றோர்கள் இருவரும் டிக்கெட் கவுன்டர் அருகே சென்றிருக்கின்றனர். இவர்களுடன் வந்த சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் தனியாக நின்றுக்கொண்டிருந்துள்ளனர். அங்கே வந்த நபர் ஒருவர் தன்னை ரயில் நிலைய பொறுப்பாளர் குமார் என சிறுவர்களிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் ஏன் தனியார் நிற்கிறீர்கள் என்று விசாரித்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் டிக்கெட் கவுன்டருக்கு சென்றிருப்பதை கூறியுள்ளார்கள். இதனையடுத்து இங்கு நிற்க வேண்டாம் இது ஆபத்தான இடம் எனக்கூறி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். முதலில் தயங்கிய சிறுவர்கள் பின்னர் அவருடன் சென்றார்கள். ஆனால் குமார் இவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து சிறுவனை தாக்கியுள்ளார்.
ஆந்திர முதல்வரின் தங்கைனு கூட பார்க்கலையே.. ஷர்மிளாவை காரோடு தூக்கிய போலீஸ்.. தெலங்கானா CM அதிரடி
பலாத்காரம்
பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்து குமார் தப்பியோடியுள்ளார். மறுபுறம் தங்களது குழந்தைகளை காணவில்லை என்று பெற்றோர்கள் ரயில்வே காவல்துறையினரின் உதவியுடன் தேடியுள்ளனர். சிறுமி பெற்றோர்களிடத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் குமார் ரயில்வே நிலைய பொறுப்பாளர் இல்லையென்பது தெரிய வந்தது. அதன் பின்னர் அவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது.
ராணுவ வீரர்
இதில் உள்ளூர் காவல்துறையினரும் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பிரிஜேஷ் குமார் யாதவ் என்பது தெரிய வந்தது. இவர் இந்திய ராணுவத்தின் சிக்னல் ரெஜிமென்ட்டில் பணியாற்றிய முன்னாள் ஜவான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பிரிஜேஷை காவல்துறையினர் தேட தொடங்கினர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதற்கு அடுத்த வருடம். அதாவது 2018ம் ஆண்டு இதேபோல செகந்திராபாத் கண்டோன்மென்ட்டில் தனியாக நின்றுக்கொண்டிருந்த சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார். ஆனால் சிறுமி ஏதோ தவறு நடப்பததை அறிந்து உஷாரான நிலையில் கூச்சலிட்டுள்ளார்.
கைது
இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் பிரிஜேஷை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது ரயில் நிலையத்தில் பெற்றோருடன் வரும் சிறுமிகள்தான் இவரின் இலக்கு. பெற்றோர்கள் டிக்கெட் எடுக்க செல்லும் நேரத்தில் சிறுமிகளிடம் பேசி தனியாக அழைத்து வந்து பாலியல் பாலத்காரம் செய்துவிடுவார். இவரால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறுமி மீது தாக்குதல் நடக்க இருந்த நிலையில் அது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதேபோல பல சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
தீர்ப்பு
இதனையடுத்து இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போக்சோ வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கானது கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், டிஎன்ஏ மற்றும் அடையாள அணிவகுப்பின் மூலம் குற்றம் உறுதி செய்யப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி இவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.