"இலை"யை தன்வசப்படுத்துவாரா.. இல்லாட்டி குக்கர் சின்னத்தில் தனிகட்சியா?.. தினகரனின் திட்டம் என்ன?
இரட்டை இலையை தினகரன் மீட்பாரா? இல்லை குக்கர் சின்னத்தில் தனி கட்சி தொடங்குவாரா? என்ற கேள்வி எழுந்தது.
சென்னை: இரட்டை இலையையும் அதிமுகவையும் எடப்பாடி- பன்னீர் அணியிடம் இருந்து தினகரன் மீட்டெடுப்பாரா? இல்லை, தனி கட்சி தொடங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்கே நகரில் 89,013 வாக்குகள் பெற்று தினகரன் சுயேச்சை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆளும் கட்சி வேட்பாளரை காட்டிலும் 40,707 வாக்குகள் அதிகம் பெற்றார்.
திமுக, பாஜக உள்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துவிட்டனர். நேற்று ராணி மேரி கல்லூரிக்கு வந்த தினகரன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை பெற்று சென்றார்.
குழப்பம் ஏற்படுத்திய தினகரன்
சான்றிதழை பெற்று கொண்டு தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்பீரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு தினகரன், 3 மாதத்துக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும், இரட்டை இலையை மீட்போம் என்று கூறிய தினகரன் மற்றொன்றையும் கூறினார். அதுதான் இப்போது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஆர்கே நகரில் 3-ஆவது அத்தியாயம்
அவர் கூறுகையில் 1949-ஆம் ஆண்டு அண்ணா முதல் அத்தியாயத்தையும் தொடங்கினார். அதுபோல் எம்ஜிஆரும் 1972-ஆம் ஆண்டு இரண்டாவது அத்தியாயத்தை தொடங்கினார். அதுபோன்று இந்த ஆர்கே நகரில் இருந்து மூன்றாவது அத்தியாயத்தை நான் தொடங்குவேன். இரட்டை இலையை மீட்க வேண்டும் என்று நிர்வாகிகள் என்னிடம் தெரிவித்த போது கூட மீட்கலாம், இரட்டை இலையில் போட்டியிடுவோர் அதில் போட்டியிடட்டும், குக்கரில் போட்டியிடுவோர் அதில் போட்டியிடட்டும் என்று பதில் அளித்தார்.
தினகரன் புது கட்சி
தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் அணியினர்தான் இரட்டை இலையை மீட்போம் என்று கூறி அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆனால் தினகரன் அத்தகைய கோரிக்கைகளை மிகவும் மேலோட்டமாக வைத்து வருகிறார். எனவே அவருக்கு தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இன்னும் அணையா நெருப்பாக இருப்பதாகவே தெரிகிறது.
தனி கட்சி ஐடியா?
கடந்த முறை நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தலின்போது இரட்டை இலை முடக்கப்பட்டுவிட்டது. அப்போது அதிமுக அம்மா என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வந்த தினகரன், தனி கட்சியை தொடங்கி தலைவராக வேண்டும் என்று எண்ணினார். ஆனால் சசிகலா குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதிமுகவை மீட்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறிவிட்டதாக தெரிகிறது.
தனி கட்சி ஏன்?
ஆர்கே நகரில் இரட்டை இலை படுதோல்வி அடைந்துவிட்டதாலும் குக்கர் சின்னம் மிகவும் பிரபலமடைந்ததால் அந்த சின்னத்தை விட்டுக் கொடுக்க அவருக்கு மனமில்லை. ஒரு வேளை இரட்டை இலையை மீட்டாலும் இனி வரும் தேர்தல்களில் அந்த சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் டெல்லியின் நேரடி பார்வையில் அதிமுக இருப்பதால் எடப்பாடி- பன்னீர் அணியிடம் வம்படியாக இரட்டை இலையை கேட்பது தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பது தினகரனுக்கு தெரியாமல் இல்லை.
இரட்டை குதிரை சவாரி
பாஜகவை எதிர்த்து கொண்டு இரட்டை இலையை மீட்பதை காட்டிலும் குக்கர் சின்னத்தை வைத்துக் கொண்டு தனி கட்சி தொடங்குவதே புத்திசாலித்தனம் என்று
அவர் நினைக்காமல் இல்லை. மேலும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை இருக்கும் தினகரனுக்கு ஜோதிடர்கள் என்ன கூறினார்கள் என்பது தெரியவில்லை. இரட்டை இலை, 3-ஆவது அத்தியாயம் என்று தினகரன் குழப்பத்தை ஏற்படுத்துவதால் அவர் இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நிலையே ஏற்பட்டுள்ளது.