மேலூரில் தினகரன் கூட்டத்துக்கு அரசு தொல்லை கொடுக்கிறது.. திவாகரன் குற்றச்சாட்டு
மேலூரில் நடைபெற உள்ள டிடிவி தினகரன் கூட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலூர்: டிடிவி தினகரன் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என அணிகள் பிரிந்து இருக்கும் நிலையில் டிடிவி தினகரன் தனது பலத்தை நிரூபிக்க நாளை மதுரை மேலூரில் பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தினகரன் பல தடாலடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மேலூரில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் நடந்து வரும் ஏற்பாடுகளை சசிகலா சகோதரர் திவாகரன் இன்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாளை நடைபெற உள்ள தினகரன் கூட்டத்திற்குத் தமிழக அரசு இடையூறு செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கூட்டத்திற்குத் தொண்டர்கள் வருவதற்கான பேருந்துகளை கொடுக்கக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு வருவதாகவும் திவாகரன் கூறியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஓபிஎஸ் டீமில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி மீது வழக்குத் தொடரப்படும் என்றும் திவாகரன் எச்சரித்துள்ளார்.