சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் 22 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் அனுப்பியுள்ள கடித விவரம்:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என 22 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் இன்று கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.
|
கர்நாடகாவை போல...
இதேபோல் ஒரு சூழல் கர்நாடகாவில் ஏற்பட்ட போது அம்மாநில ஆளுநர், முதல்வராக இருந்த எடியூரப்பா பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிட்டிருந்தார். முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் எந்த ஒரு காலதாமமும் காட்ட கூடாது.
குதிரைபேரம்
அப்படியான காலதாமதமானது அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு அரசு தொடர வழிவகை செய்யும். ஜனநாயக மாண்புகளை சீர்குலையச் செய்துவிடும். முந்தைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்ததைப் போன்ற குதிரை பேரங்களுக்கு வழிவகுத்துவிடும்.
பொம்மை வழக்கின் அடிப்படையில்...
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை உடனே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தின் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.