வண்டிக்கு வழி விட மறுத்த டிரைவரின் காதைக் கடித்துத் துப்பிய இன்னொரு டிரைவர்.. திண்டுக்கல்லில்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வாகனத்திற்கு வழி விட மறுத்த டிரைவரின் காதை மற்றொரு டிரைவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே, புதூரில் வசித்து வருபவர்கள் சித்திரவேல் (25), முத்துப்பாண்டி (25). டிரைவர்களான இருவரும் நேற்று, திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு, அவரவர் வாகனங்களில் பணிக்குச் சென்றனர்.
அப்போது முத்துப்பாண்டியின் வாகனத்திற்கு முன்னால் சென்றது சித்திரவேலின் வாகனம். நீண்டநேரம் தனக்கு பாதை கொடுக்கும் படி ஹார்ன் அடித்து வலியுறுத்தியுள்ளார் முத்துப்பாண்டி. ஆனால், சித்திரவேல் பாதை கொடுக்கவில்லை. இதனால் சித்திரவேலின் வாகனத்தைப் பின் தொடர்ந்தே செல்லவேண்டிய நிர்ப்பந்தம் முத்துப்பாண்டிக்கு ஏற்பட்டது.
நீண்ட முயற்சிக்குப் பின் ஒரு வழியாக சித்திரவேலின் வாகனத்தை முந்திச் சென்றார் முத்துப்பாண்டி. சித்திரவேலின் வாகனத்திற்கு குறுக்கே தனது வாகனத்தை நிறுத்திய முத்துப்பாண்டி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ஆத்திரத்தில் சித்திரவேலின் வலது காதை கடித்துத் துப்பினார் முத்துப்பாண்டி. வலியால் துடித்த சித்திரவேல், உடனடியாக சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காதின் சிறு நரம்புகள் சேதமடைந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.