அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது.. தேர்தல் ஆணைய தகவலால் டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவு
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த பிரச்சினை இன்னும் தீரவில்லை என்பதால் அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு டிடிவி தினகரன் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்ற ஆர்.டி.ஐ ஆர்வலர், இந்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தொர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தார். இவர்
ஓபிஎஸ் அணி தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி என்றும் கூறப்படுகிறது.
"உங்களுடைய ஆவணப்படி, அதிமுக பொதுச்செயலாளர் யார்?, துணை பொதுச்செயலாளர் யார்?, எந்த தேதியில் நியமிக்கப்பட்டார்?,. எதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
எழுத்துப்பூர்வ பதில்
ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. முதல் முறையாக எழுத்து பூர்வமாக தேர்தல் ஆணையம் இப்போதுதான் பதில் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
பொதுச்செயலாளர் இல்லை
தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. வாதங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையம் முன்பு உள்ளதால் இப்போது எதையும் சொல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உறுப்பினர்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க பிறப்பித்த உத்தரவு செல்லாது என ஆகிறது. தினகரன் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்பதால் அவர் துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருப்பதும் சட்டப்படி செல்லாது என்று ஆகிறது. ஏனெனில் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, தினகரனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.
தினகரனுக்கு பின்னடைவு
டிடிவி தினகரனோ, நான்தான் அதிமுக துணை பொதுச்செயலாளர் என கூறியபடிதான் கட்சி தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக கூறி வருகிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், ஆர்டிஐ தகவல் தினகரனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.