தமிழகத்தில் இந்த முறை பெண் வாக்காளர்களே அதிகம்!
சென்னை: தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார் கூறியுள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பணம் பெற்று வாக்களிக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தினார்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த மற்றொரு காணொளியும் இதில் வெளியிடப்பட்டது.
பெண் வாக்காளர்கள் அதிகம்:
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண் குமார் , "தமிழகத்தில் இந்த தேர்தலில் தான் முதல் முறையாக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
வாக்களிக்க தகுதி:
2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 570 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 75 லட்சத்து 8 ஆயிரத்து 336 ஆண் வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிக்க தயார்:
அதன்படி, ஆண்களை விட 13,234 பெண் வாக்காளர்கள் தமிழகத்தில் அதிகமாக வாக்களிக்க உள்ளனர்.
மொத்த ஓட்டு 5,5 கோடி:
ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 5.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை:
வரும் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வருவதாக கூறிய பிரவீண்குமார், அரசியல் கட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூறினார்.
மொத்த பறிமுதல்:
இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் 34 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பிரவீண் குமார் தெரிவித்தார்.