16 பேரை பலிகொண்ட தோட்டா தொழிற்சாலை விரைவில் மூடப்படும்- அமைச்சர் நடராஜன் உறுதி
16 பேர் உயிரிழக்க காரணமான திருச்சியில் துறையூர் தோட்டா தொழிற்சாலை விரைவில் மூடப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முருங்கம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டா தொழிற்சாலை உள்ளது. இங்கு வெடி பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்த ஆலையின் இன்று காலை 60 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் அதிர்வு ஏற்பட்டு கட்டங்கள் இடிந்தன.
தோட்டா தொழிற்சாலை
விபத்து ஏற்பட்ட தோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன. ஆலையின் 4வது பிரிவில் வெடிவிபத்து ஏற்பட்ட போது 22 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 6 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆலையின் மற்ற பிரிவுகளில் பணியாற்றி 300 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.
பொதுமக்கள் புகார்
விபத்து நடந்த ஆலையில் பாறைகளை தகர்ப்பதற்கான வெடிமருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தோட்டா தயாரிக்கும் ஆலையின் உரிமையாளரை கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுகாதாரம் பாதிப்பு
இப்பகுதியில் சுமார் 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மாசுபாடு, சுகாதர சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வெடிமருந்து கம்பெனிகள் இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் பல வருடங்களாக போராட்டம் நடத்தினர்.
ஆலையை மூட அமைச்சர் உறுதி
விபத்து நடந்த ஆலை முடப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்துள்ளார். விபத்து நடந்த ஆலை 24 மணி நேரத்தில் மூடி சீல் வைக்கப்படும் என்று அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் உறுதி அளித்துள்ளார். இதனிடையே செங்காடுப்பட்டியில் உள்ள மற்றொரு வெடிமருந்து ஆலையையும் மூட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிவாரண உதவி
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் நடராஜன் கூறியுள்ளார். விபத்து நடத்த இடத்தில் இருந்து துர்நாற்றத்துடன் கூறிய புகை பரவி வருவதால் அச்சமடைந்துள்ள மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.