யாகூப் மேமனை இன்று தூக்கிலிட்டது கலாமுக்கு செலுத்தப்பட்ட 'கொடிய அஞ்சலி': ராமதாஸ் சாடல்
சென்னை: தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி, யாகூப் மேமனை தூக்கிலிட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட டிவிட்டுகளின் தொகுப்பு: இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிப்பது தான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி.
யாகூப் மேனனை தூக்கிலிடுவதில் அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: அவரது கடைசி மனுவை உச்சநீதிமன்றம் ஆழ்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும்.
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் விவகாரம் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ள ராமதாஸ், இறுதியாக, திமுகவையும் விமர்சனம் செய்துள்ளார்.
"தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மது விலக்குக்கு முக்கியத்துவம். ஆனால், தேர்தல் அறிக்கையை தயாரிப்பவர் மது ஆலை அதிபர், ஆஹா, என்ன பொருத்தம்" என்று ராமதாஸ் சாடியுள்ளார்.
இதனிடையே, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகரில் லங்கேட் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் பேரணி நடத்தினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.