நாளொன்றுக்கு ரூ.12 கோடி நஷ்டம்... தள்ளாடும் போக்குவரத்துறை... காரணம் யார்?
மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் நஷ்டக்கணக்கை காரணம் காட்டி அரசு கட்டண உயர்வை செய்துள்ளது.
Recommended Video
சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள விளக்கம் பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. தமிழக போக்குவரத்து துறைக்கு நாளொன்றுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார் விஜயபாஸ்கர். ஆனால், நஷ்டம் ஏற்பட யார் காரணம் என்பதை அமைச்சர் விவரிக்கவில்லை.
தமிழக போக்குவரத்து நிறுவனங்கள் லாபநோக்கில் செயல்படவில்லை என்றும் அதனால், நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் முன்வைக்கப்படும் விவாதத்தை இந்த கட்டண உயர்வு மீண்டும் கிளப்பியுள்ளது. தமிழக போக்குவரத்து கழகங்களின் கீழ் ஓடும் பேருந்துகளின் கட்டணத்தை 6 ஆண்டுகளாக உயர்த்தவில்லை. இதனால்தான் நஷ்டம் என்கிறார் அமைச்சர். ஆனால் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விவாதமா?
ஏனென்றால், 2010 ஆம் ஆண்டிலிருந்து குறைவான கட்டணத்தில் பேருந்துகளை இயக்கியதால் தமிழக போக்குவரத்து துறைக்கு ஏற்பட்ட நஷ்டம் வெறும் 20 ஆயிரம் கோடி ரூபாய் தான். ஆனால், தமிழக போக்குவரத்து கழகங்களின் மொத்தக்கடன் 70 ஆயிரம் கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம். 2010 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் மட்டுமே 50 ஆயிரம் கோடியைத்தாண்டும். இதற்கு என்ன காரணம்?
உதிரி பாகங்கள் வாங்கியதற்கு முறைகேடு
உதிரிப்பாகங்கள் கொள்முதல், புதிய பேருந்துகள் வாங்கியது ஆகியவற்றில் முறைகேடு நடந்ததே போக்குவரத்து நிறுவனங்களின் நிதிநிலை பாதாளத்திற்கு சென்றதற்கு காரணம் என்கிறார்கள் தொழில்சங்கத்தினர். அதிமுக, திமுக மாறிமாறி போக்குவரத்து துறையில் அக்கறை செலுத்தாமல், வீணடித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு லஞ்சம்
ஒரே நாளில் நஷ்டத்தையோ, கடனையோ அடைக்க வழியில்லை. எனவே, தொலை நோக்கு திட்டத்தை தமிழக அரசு வகுக்கவில்லை என்கிறார் மூத்த தொழில்சங்க பிரதிநிதி. பேருந்துகளை பராமரிப்பது, இயக்குவதில் திறமையான பணியாளர்களை சேர்க்கவேண்டும் என்ற நோக்கம் யாருக்கும் இருந்ததில்லை, ஓட்டுநருக்கு 5 லட்சம், நடத்துனருக்கு 8 லட்சம் வாங்கிக்கொண்டு பணிக்கு சேர்த்ததை ஊர் அறியும்.
எழமுடியாத கடனில்
பேருந்துகள் வீணாய்போக இதுவும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. மோசமான பராமரிப்பும் அடுத்த பிரச்னை. இப்படி எல்லாம் சேர்ந்து தமிழக போக்குவரத்து கழங்களை எழமுடியாத கடனில் தள்ளியுள்ளது.
கட்டண உயர்வு கைகொடுக்குமா?
முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து சொத்தை கைப்பற்றவேண்டும். இனிமேலும் ஊழல் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி செய்யாவிட்டால், இந்த கட்டண உயர்வும் போக்குவரத்து கழகத்திற்கு கை கொடுக்கப்போவதில்லை.